Thursday, October 6, 2011

அகர்உட் அறிமுகம்

 அகர் ஒரு மதிப்பு வாய்ந்த சொத்து: அகர் ஒரு வியாபார ரீதியிலான பணப்பயிர். இதன் பிறப்பிடம் இந்தியா என்றாலும் இப்பயிர் மலேசியா, தாய்லாந்து, தென்கொரியா, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, லாவோஸ், வியட்நாம், கம்போடியா, மியான்மர் மற்றும் பல நாடுகளில் பயிரிடப்படுகிறது.

பயிரிட தகுதி வாய்ந்த அமைப்பு: அகர்மரம் மேற்பகுதி விவசாயிகளின் தங்கப் பயிர். அகர் ஒரு பாதுகாப்பான சிறிய மரம். இப்பயிரை மேற்பகுதி மண்டலத்தில் எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்காமல் முக்கிய பயிராக காப்பி, டீ, ஆர்கானட், கார்டமம், தென்னை மற்றும் பனை போன்றவற்றை பயிரிடுவதைப் போன்று மலையடிவாரங்களிலும் மேட்டுபாங்கான இடங்களிலும் பயிரிடலாம்.


காப்பித் தோட்டங்கள் ஒரு சிறந்த இடம்: அகர்வுட் பயிர்களை காப்பித் தோட்டங்களில் ஆரஞ்ச், சில்வர் ஓக் மற்றும் இதர நிழல் தரும் மரங்களின் ஊடே பயிரிடலாம். இப்பயிரின் இலை அமைப்பானது இயற்கையில் எளிதில் மக்கக்கூடியது. இயற்கை எருவாக பயன்படக்கூடியது. வேர் ஆழமாக பூமியில் ஊடுருவாத தன்மை கொண்டதுடன் இது ஊர்ஜிதப்படுத்துகிறது. பத்தின் இரு மடங்கு விளைச்சலை குறுகிய காலத்தில் கொடுக்கிறது.


குறைந்த முதலீடு அதிக லாபம்: அகர்வுட் பயிர் நிரந்தரமான அதிக வருவாயினை பயிரிடப்பட்ட 7வது வருடத்திலிருந்து தருகிறது. எதிர்பார்த்த வருவாய் ஒரு கிலோவிற்கு ரூ.10,000 என்றாலும் ஒரு மரத்திற்கு 50 கிலோ எடை வந்தால் ரூபாய் ஐந்து லட்சம் கிடைக்கும். வருவாய் தற்போதைய சந்தை மதிப்பினை விட குறைவு.


சந்தன மரத்தைவிட சிறந்த அகர்வுட்: முதல் தரமான அகர்வுட்டின் விலை ஒரு கிலோவிற்கு ரூ.30,000 மற்றும் அதன் எண்ணெயின் விலை சில்லரை சந்தையில் ஒரு கிலோவிற்கு ரூ.10 லட்சம், தேசிய அளவிலும் அகில?உலக அளவிலும் அகர்வுட் ஒரு நிலையான தேவையையும் பெரிய வியாபார மதிப்பையும் கொண்டுள்ளது.


பராமரிப்பு வேண்டாம், தொழிலாளர் கண்காணிப்பு வேண்டாம்: அகர் பயிரிடுவதற்கு பயிரிடும் விவசாயியை தவிர வேறு தொழிலாளர்கள் கண்காணிப்பு வேண்டாம். ஒருமுறை பயிரிட்டஉடன் அதனை அறுவடை செய்யும் வரை இதற்கு குறிப்பிடத்தக்க சிறப்பு கவனம் ஏதும் செலுத்த வேண்டாம். தொடர்புக்கு: கனகராஜ், செய்யூர்.
போன்: 04183-320 193, மொபைல்: 77083 98535, 95855 60318.

                                                                                                                                                நன்றி தினமலர் 

Monday, October 3, 2011

குறுகிய காலத்தில் நிறைந்த லாபம் தரும் குமிழ் மரம்


நம் நாட்டில் தீர்க்க முடியாத திரும்ப திரும்ப நிகழும் பிரச்னை என்ன? கண்டிப்பாக ஒரு சம்சாரி தான் செய்யும் பயிர்தொழிலை நம்பி தன் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்பதுதான். அவன் என்ன தான் நல்ல மகசூலை விளைவித்து தன் விவசாய வண்டியை ஓட்ட நினைத்தாலும் அதன் மூக்கணாங்கயிறு வேறு ஒருவரிடத்தில் அல்லவா உள்ளது. இதற்கு மாற்று வழி என்ன என்று யோசிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது மரம் வளர்ப்பு.

பல மரங்கள் பல வழிகளில் பயன் தருவதை நாம் அறிவோம். குறுகிய காலத்தில் நிறைந்த லாபம் தரும் மரம் எது என்ற கேள்விக்கு சரியான விடையளிக்கிறது குமிழ் மரம். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் குமிழ் மரம் கொடி கட்டி பறக்கிறது.

குமிழ் மரத்தை இப்பகுதி மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்த விவசாயி எஸ்.டி.சண்முகசுந்தரம்(
ஜெகதீஸ்வரர் உயர்ரக நாற்றுப்பண்ணை - கொத்தமங்கலம் ) குமிழ் சாகுபடி குறித்து:

நான் 1987ம் ஆண்டில் புதுக்கோட்டையில் என்.எம்.ஆர் ஆக வேலைக்க சேர்ந்தேன். எனக்கு அங்க கருவேல மரங்களை நடவு செய்யும் வேலையை கொடுத்தார்கள். கொடுத்த வேலையை சிறப்பாக செய்ததால் என்னை மேற்பார்வையாளராக நியமனம் செய்தார்கள். வேலை செய்து கொண்டிருக்கும் போதே சமூக காடுகள் திட்ட அலுவலர் சுப்ரமணியன் என்பவரின் உதவியோடுவணிகவியர் பட்டப்படிப்பையும் தொடர்ந்தேன். கருவேல மரங்களை தொடர்ந்து மா, பலா, புளி போன்ற பழ கன்றுகளையும் நடவு செய்தோம்.

இந்த மரங்களில்லாமல் வேறு மரங்களை அதாவது விவசாயிக்கு நல்ல பலன் கொடுக்கும் மரங்களை நட சொல்ல வேண்டுமென்று முதலில் ரோஸ்வுட் மரங்களை நடவு செய்தோம். ரோஸ்வுட் மரங்கள் பலன் தர 40 முதல் 60 ஆண்டுகள் ஆகும் என்பதால் விவசாயிக்கு குறுகிய காலத்தில் பலன் கொடுக்கும் மரங்களைத் தேடிய போது குமிழ் மரத்தை தேர்ந்தெடுத்தேன்.

அதன்படி 1991ம் ஆண்டில் திண்டுகல்லில் உள்ள ஒரு நர்சரியிலிருந்து குமிழ் கன்றுகளை வாங்கி வந்து விவசாயிகளுக்கு நடவு செய்ய கொடுத்தேன். இந்த குமிழ் கன்றானது சிறியதாக இருக்கும் போது மிகவும் மென்மையாக இருக்கும். இதனால் பல விவசாயிகள் என்னிடம் சண்டைக்கு வந்தார்கள்.

வயலில் உள்ள குமிழ் கன்றுகளை எல்லாம் பிடுங்கி வீசினார்கள். ஒரு சிலர் மட்டும் அவற்றை ஏதோ நம்பிக்கையில் பராமரித்து வந்தனர். அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. இன்று அவர்களை இந்த குமிழ் மரங்கள் லட்சாதிபதிகளாக்கி கொண்டிருக்கின்றன.



குமிழ் மரத்தின் எதிர்காலம்?


விவசாயிகள் தொடர்ச்சியாக பலன்தரும் வெள்ளாமையை விட்டுவிட்டு, மரப்பயிர்களுக்கு மாறியபின், பலவிதமான மரங்கள் வந்து போயிருக்கின்றன. அவைகளுள் இன்றும் பேசப்படு பவை குறைவுதான். அவற்றை விரல்விட்டு எண்ணி விடலாம். விவசாயிகள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்த பலவிதமான மரங்களில் முதல் இடம் பெறுவது குமிழ்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

குமிழைப் பற்றி பேசாத மர விவசாயிகள் தமிழகத்தில் இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட வந்து விட்டது. ஆனால், இந்த மரத்திற்கான எதிர் காலம்... இந்த மரத்தை பயிர் செய்திருக்கும் விவசாயிகளின் எதிர்காலம் குறித்த கேள்விகளோடு, குமிழ் மர வியாபாரி ஒருவரை தமிழகத்தின் மிகப் பெரிய பூச்சந்தை இருக்கும் நிலக்கோட்டையில் சந்தித்தோம். அவர் தமிழகத்தில் பல இடங்களில் இருந்து பலவித மரங்களை வாங்கும் வியாபாரி எம்.ஏ.ஜான்போஸ்கோ (அன்னை ஷா மில், அணைப்பட்டி ரோடு, நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் 624208. தொலைபேசி: 04543 233723, 98946 21486).



“குமிழ் மரத்தை தமிழகத்தில் பரவலாக விவசாயிகள் பயிர் செய்து வந்தாலும், வெட்டி விற்கக்கூடிய அளவிலான மரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, அணவயல் கைகாட்டி, தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில்தான் உள்ளன. மற்ற மரங்களை விட குமிழ் குறுகிய காலத்தில் பிரபல மடைந்ததற்கு காரணம் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சி, முதிர்ச்சிதான்.

அதோடு இது இழைப்பிற்கு தேக்கைவிட நன்றாக இருப்பதால் அதிகமான தச்சு வேலையாட்களும், நீண்ட ஆயுள், உறுதியோடு வெண்மையான நிறத்திலும் இருப்பதால் வேண்டிய வண்ணங்களைக் கொடுத்து நினைத்த வண்ணத் தைப் பெற முடியும் என்பதால் வீடு கட்டுவோரும் இதை தேர்வு செய்கின்றனர்.

குமிழ் மரத்தைக் கொண்டு நிலை, கதவு, ஜன்னல் போன்றவை செய்யப்படுகின்றது. பலகை எடுக்க வேண்டுமெனில் நம்நாட்டு குமிழ் 15 ஆண்டு முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். எனவே பலகைக்கு தேவையான குமிழ் மரங்களை வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்கி றோம். இந்தக் குமிழ் மரங்கள் லேசானதா கவும், பலகை செய்ய ஏதுவானதாகவும் இருக்கிறது.



குமிழ் மரம் சாகுபடி செய்ய விரும்புவர்கள் அடர்நடவு முறையில் வைக்கலாம். ஏனெனில் குமிழ் ஆணிவேர் தாவரம். பக்க வேர்கள் மிகக்குறைவு. இம்முறையில் ஏக்கருக்கு 1000 மரங்கள் வரை வைக்கலாம். நடவு செய்து சிறப்பான முறையில் மண்ணிற்கேற்ப நீர்ப் பாசனத்தை செய்து வந்தால் 7 ஆண்டுகளில் விறகு நீங்கலாக ஒரு மரம் ஒரு டன் எடைவரும். 1 டன் மரத்தை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விலை கொடுத்து எடுத்துக் கொள்கிறேன். பலகை எடுக்கும் வகையில் இருந் தால் டன்னுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கக்கூட தயாராக உள்ளேன்.

மரம் வளர வளர பக்கக்கிளைகளை கவாத்து செய்து விடுவது மிகவும் முக்கியம். குமிழ் மரம் நேராகவும், அதிக எடையுடனும் வளரும். ஆண்டுக்கொருமுறை உரம் வைத்தால் இன்னும் நன்றாக வளரும். தமிழ்நாட்டில் எங்கு இருந்தாலும், மரத்தைப் பார்த்து விலைக்கு எடுத்துக் கொள்கிறேன். மர உரிமையாளர் கிராம அலுவலரிடமிருந்து சிட்டா அடங்கள் பெற்றுக் கொடுத்துவிட்டால் மர அறுவடை முடிந்தவுடனேயே முழுப்பணத்தை யும் கொடுத்துவிடுகிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் குமிழ் மரத்தின் தேவை மிகவும் உயர்ந்துள்ளது. வரும் ஆண்டு களில் இன்னும் தேவை உயரும். எனவே, விவசாயிகள் குமிழ் மரத்தை தன்னம்பிக்கையோடு பயிர் செய்யலாம். விற்பனைக்கு குறைவிருக்காது. வேம்பின் தேவையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் தற்போது இருந்த வேப்பமரங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு விட்டன.

எனவே எதிர்காலத்தில் வேம்பு மிகக்குறைவாகவே கிடைக்கும். ஆக தேவை அதிகரிக்கும் போது, அதன் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் வேம்பு சாகுபடியிலும் கவனம் செலுத்தினால் எதிர்காலத்தில் நிச்சயம் நல்ல வருமானம்தான்” என்கிறார் ஜான் போஸ்கோ.

                                                                                                            நன்றி "தழில்சிகரம்.கம்"

குமிழ் சாகுபடியில் 15 ஆண்டுகள் அனுபவம் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அணவயல் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சொல்வதைக் கேட்போமா...!

மூணு வருஷம்தான் பராமரிப்பு!

''என்னைப் பொறுத்தவரைக்கும் குமிழ் மாதிரி குறைஞ்ச காலத்துல அதிக வருமானம் கொடுக்குற மரம் எதுவும் இல்லீங்க. 7 முதல் 10 வருஷத்துக்குள்ள ஒரு மரம் ஒரு டன் எடை வந்துடுது. இதை என் அனுபவத்துலயே உணர்ந்திருக்கேன். 10 வருஷத்துக்கு முன்ன 30 சென்ட் நிலத்துல 9 அடிக்கு 9 அடி இடைவெளியில குமிழை நடவு செஞ்சிருந்தேன். கவாத்து அடிச்சு, முறையா தண்ணி கொடுத்து பாத்துகிட்டதால மரங்க நல்லா வளந்திருக்கு. அதுல வேலியோரமா இருந்த நாலஞ்சு மரங்களை போன வருஷம் வெட்டி வித்தேன். ஒவ்வொரு மரமும் ஒன்றரை டன் எடை இருந்துச்சு. ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனதால, மரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மிச்ச மரங்களை இன்னும் வெட்டாம வெச்சிருக்கேன்.

இந்த மரத்துக்கு இருக்குற டிமாண்டை பாத்துட்டு ஒண்ணரை வருஷத்துக்கு முன்ன, செடிக்கு செடி 14 அடி, வரிசைக்கு வரிசை 13 அடி இடைவெளியில ரெண்டரை ஏக்கர்ல நடவு செஞ்சிருக்கேன். இப்படி நட்டா ஏக்கருக்கு 220 கன்றுகள் வரைக்கும் தேவைப்படும். முதல் வருஷம் வரைக்கும் ஊடுபயிரா கடலை, உளுந்துனு மாறி, மாறி ஊடுபயிர் செஞ்சிக்கலாம். குமிழைப் பொறுத்தவரைக்கும் 20 அடி உசரத்துக்கு மரம் போற வரைக்கும் கவாத்து எடுக்கணும். அதுக்கு மேல தேவையில்லை. அதேபோல முதல் ரெண்டு, மூணு வருஷம் வரைக்கும் முறையா தண்ணி கொடுத்து பராமரிக்கணும். இதையெல்லாம் செஞ்சிட்டா... குமிழ்ல நல்ல மகசூலை எடுத்துடலாம். நடவு செஞ்ச 7-ம் வருஷத்துல இருந்து 10-ம் வருஷத்துக்குள்ள அறுவடை செஞ்சிடலாம். ஒரு மரத்துக்கு சராசரி விலையா 10 ஆயிரம் கிடைச்சாலும், ஒரு ஏக்கர்ல 200 மரத்துக்கு, 20 லட்ச ரூபா வருமானமா கிடைக்கும். விற்பனையிலயும் பிரச்னையில்ல. உங்ககிட்ட குமிழ் மரம் இருக்கறது தெரிஞ்சா... உள்ளூர் வியாபாரிகளே வந்து பணம் கொடுத்து வெட்டிக்கிட்டு போயிடுவாங்க. அந்தளவுக்கு இதுக்கு டிமாண்ட் இருக்கு.''

என்ன... அனுபவ விவசாயி ரவிச்சந்திரன் சொன்னதை மனதில் ஏற்றிக் கொண்டீர்கள்தானே! இனி, முடிவு எடுக்க வேண்டியது நீங்களேதான்!

தொடர்புக்கு ரவிச்சந்திரன், அலைபேசி: 96551-82891.


புதுக்கோட்டை பலா: தென்னைக்கு ஏற்ற ஊடுபயிர். நட்ட தென்னை முதல் 40 வருட தென்னைமரம் வரை. ஒரு ஏக்கர் தென்னையில் 150 மரங்கள். 5 முதல் 6வது வருடங்களில் தொடர்ந்து மகசூல். வறட்சியில் தென்னை வாடினாலும் பலா தொடர்ந்து பலன் தரும். புவி வெப்பமயமாவதைத் தடுப்பதில் பலா பெரும்பங்கு வகிக்கிறது. மேலும் விபரங்களுக்கு: ஜெகதீஸ்வரர் உயர்ரக நாற்றுப்பண்ணை, கீரமங்கலம் வழி, கொத்தமங்கலம் அஞ்சல், ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம். குமிழ் எஸ்.டி.சண்முகசுந்தரம், 94860 60136, 98942 91818. 

Saturday, October 1, 2011

மண்ணின் வில்லன் - ‘சீமைக் கருவேலமரம்’


அமெரிக்க தாவரவியல் பூங்கா , ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் சீமைக் கருவேலமரம் ’ தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ‘ யாம் அறியேன் பராபரமே’

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல…., இப்போதைய பிரச்சனை….!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல…! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது…!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது….. ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது




உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்….?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.

அறியாமை

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்…..!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்….??! என்ன முரண்பாடு…?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.
நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்….
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்…..! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!