Monday, November 26, 2012

உசில உசில.... உயிர்நிலையாம் உசிலமரம்

உசிலமரத்தினால் செய்த நிலை உயிரோட்டம் உடையது என்று கிராமங்களில் உசிலமரத்தினாலான நிலை பயன்படுத்துவதை பார்க்கலாம், அவற்றின் இலை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இலையை காயவைத்து பொடிசெய்து எண்ணெய்க் குளியலின் பொது சிகைக்காய்க்குப் பதிலாகப் பயன்படுத்த உடல் குளிர்ச்சி பெறும். பட்டை, பிசின் மாந்தத்திர்க்கு மருந்தாக பயன்படுகிறது.

இப்படிப்பட்ட உசிலமரம் அரியவகை மரங்களில் ஒன்றாகிவிட்டது, இளைய தலைமுறையினர் பலருக்கு உசிலமரம் எப்படிஇருக்கும் என்பதேதேரியது என்பது வருத்தத்திற்குரியவிஷயம், இம்மரம் வறட்சிதாங்கி வளரக்கூடியது எனவே தரிசு நிலங்களிலும் சாலை ஓரமாகவும் இம்மரங்களை வளர்ப்பதின் மூலம் அவற்றை அழிவிலிருந்து மீட்கமுடியும்...

Monday, October 29, 2012

பச்சைத் தங்கத்தில் பொம்மை செய்வோம்!

''மனிதனை நம்புறதைவிட மண்ணையும் மரத்தையும் நம்பலாம். இன்றைய சூழ்நிலையில் நெல், தென்னை விவசாயத்தைவிட மரம் வளர்ப்புலதான் கணிசமான லாபம். அதற்கு நானே சாட்சி'' என தன்னைச் சந்திப்பவர்களிடம் எல்லாம் பூரிப்போடு சொல்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் வசிக்கும் ராமநாதன். வானம் பார்த்த பூமியில் மரத்தை வளர்த்து, மழையை எதிர்பார்க்கிறேன். நான் மண்ணுக்குச் செய்றேன். மண் எனக்கு செய்யுது. பொது நலத்திலும் நான் நிறைவான வருமானத்தோடதான் வாழறேன்


அவரது வீட்டின் முகப்பில் பசுமைத் தோட்டம்  எனப் பெயரிடப்பட்டு இருந்தது. உள்ளே சென்றதும் ஏதோ காட்டுக்குள் நுழைந்த உணர்வு. பலவிதமான மரங்கள் ஒன்றை ஒன்று தழுவி கலப்படம் இல்லாத காற்றை வீசிக்கொண்டு இருந்தன.

''இந்த மரங்களாலதான் பிள்ளைகளோட திருமணத்தையே செஞ்சு முடிச்சேன். ஒரு ரூபாய் கடன் வாங்கலை. சொத்தில் ஒரு பிடி மண்ணை நான் விற்கலை. எல்லாம் மரம்தந்த வரம். மரம் வளர்ப்புல பலருக்கு விருப்பம் இல்லாம இருக்கக் காரணமே, உடனடியான பலன் எதுவும் கிடையாது என்கிற எண்ணம்தான். மற்ற விவசாயத்துல செலவுகள்போக கிடைக்கிற லாபத்தைவிட மரங்களால பலமடங்கு அதிகம். என்னை பார்த்து நிறையப்பேர் மரம் வளர்ப்புல இறங்கி இருக்காங்க. நானும் அவங்களுக்கு என்னால் முடிஞ்ச உதவிகள் செய்றேன்'' என்றார்.

தோட்டத்தைச் சுற்றிப்பார்க்கத் தொடங்கினேன். ஆங்காங்கே பறவைகளுக்காக சிறிய தண்ணீ ர் தொட்டிகள் உள்ளன. அவைகள் மூலமாக, பல்வேறு மர விதைகள் கிடைத்தனவாம். '' இங்கே 120 வகையான மரங்கள் இருக்கின்றன. நம் மண்ணுக்கான மரங்கள் பலவற்றை நாம் புறக்கணிச்சுட்டோம். அதனால், நம் பழமையான மரங்களையும் தேடிக்கிட்டு இருக்கேன்'' என்றவர் ஒவ்வொரு மரத்தைப்பற்றியும் சொல்லி சிலிர்க்க ஆரம்பித்தார்.

''இந்த மரத்தின் பெயர் கருங்காலி. பச்சைத் தங்கம் என மர ஆர்வலர்கள் அழைப்பாங்க. இந்த மரத்தில்தான் குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகள் செய்வாங்க. சாதாரணமாக, விளையாட்டுப் பொருட்களை புள்ளைங்க வாயில்வைக்கும். ஆனா,இந்த மரம், நோய் நீக்கி. அதனால், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இதோ... இந்த ஈர பலாமரக் காய்களைச் சமைச்சா, அசைவ கறிபோலவே இருக்கும். இதன் பெயர் பாம்பு கொல்லி. இந்த மரம் இங்கே கிடைக்காது. மலைப் பிரதேசங்கள்லதான் கிடைக்கும். இது இருக்கும் இடத்தைச்சுத்தி 100 அடி சுற்றளவில் எந்தப் பாம்புகளும் வராது. இரவு நேரத்துலகூட நான் பயம் இல்லாம தோட்டத்தைச் சுத்திவர இந்த மரம்தான் காரணம்.

குமிழ் மரம் ஆஸ்திரேலிய மரம். ஏழு ஆண்டுகள்ல வளர்ச்சி அடைஞ்சுடும். செயற்கை கை, கால்களை இதுலதான் செய்வாங்க. எடை குறைவானது. செஞ்சந்தன மரம் ஜப்பான் நாட்டுல பாதுகாப்புக்காகப் பயன்படுத்துறாங்க. இந்த மரத்தை ஊடுருவி அலைகற்றைகள் வர முடியாது. மகோகனி மரத்துலதான் வெள்ளை மாளிகை கட்டப்பட்டது. கொக்கு மந்தாரையும் அந்தி மந்தாரையும் பில்லி சூன்யம் நெருங்கவிடாம செய்யும்'' என விவரித்துக்கொண்டே சுற்றிக்காட்டினார். இங்கே வருடந்தோறும் வனத் துறையில் இருந்து மாணவர்கள் பயிற்சிக்காக வருவார்களாம்.

''எனக்கு பணத் தேவைகள் வரும்போது மரத்தை விற்றுவிடுவேன். அந்த இடத்தில் மரக் கன்று ஒன்றை உடனே நட்டுவைத்து விடுவேன். யாராவது மரம் வளர்க்க ஆசைப்பட்டால் சொல்லுங்கள். நான் அவர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன்'' என்ற ராமநாதன்.

சி.சுரேஷ்  

Sunday, October 14, 2012

புதையல் கொடுக்கும் பூவரசு



மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை. அதுமட்டும்மல்ல இவற்றினால் செய்யப்படும் பிரோ, கட்டில் போன்ற பொருட்களுக்கும் தனிமதிப்புண்டு அத்தகைய பூவரசு மரத்தை வணிகரீதியாக வளர்ப்பதை பற்றிபார்ப்போமா......!

ஏக்கருக்கு 1,200 மரங்கள். ஐந்தாம் ஆண்டு முதல் வருமானம். பராமரிப்புச் செலவு இல்லை. 

இதய வடிவிலான இலைகள்... மஞ்சள் நிற மலர்கள், அடர்ந்த நிழல்... குளிர்ந்தக் காற்று... இவைதான் பூவரசு மரத்தின் அடையாளம். கிராமத்துச் சிறுவர்கள், இம்மரங்களின் இலைகள், காய்களை வைத்து விளையாடுவார்கள். இதன் போத்துகளை திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பயன்படுத்துவார்கள்.அதிகளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் ஆற்றல் படைத்தது என்பதால்... கமலை ஏற்றத்தில் நீர் இறைக்கும்போது மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரங்களைத்தான் கிணற்று மேட்டில் நடவு செய்திருப்பார்கள்.

இப்படிப் பண்டை காலத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு பின்னிக் கிடக்கும் பூவரசு... 'நாட்டுத் தேக்கு' என்று புகழப்படும் அளவுக்கு, வலிமையான மரமும்கூட. அதனாலேயே... இந்த மரங்களை வெட்டி, தூண்கள், ஜன்னல்கள், கதவுகள் என பயன்படுத்துவது தொடர்கிறது.

தேக்கு, குமிழ் போன்ற மரங்களுக்கான தேவை இருப்பதால், அவற்றை புதிது புதிதாக அதிக அளவில் வளர்த்தெடுக்கிறார்கள். ஆனால், அதேபோல, பெரிய அளவில், பூவரசு மரத்தை புதிதாக உருவாக்கத் தவறிவிட்டதால், அவற்றின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் வேதனையான விஷயம். இதன் மகத்துவத்தை அறிந்த, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலானவர்கள் மட்டுமே பூவரசு வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்! அவர்களில் ஒருவர்... தஞ்சாவூர் மாவட்டம், புலவன்காடு கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன்.

ஓர் அதிகாலை நேரத்தில், தோட்டம் தேடிச் சென்றபோது, அன்போடு வரவேற்ற மாரியப்பன், ''இப்போ என் தோட்டத்துல 25 பூவரசு மரங்கள் இருக்கு. எல்லாமே, இருபதுல இருந்து இருபத்தஞ்சு வயசுகுள்ளாற உள்ள மரங்கள். ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை நல்லா வளந்த ஒரு மரத்தை வெட்டுவேன். ஆசாரிகளை வெச்சு, கட்டில், பீரோனு செய்து சுத்துவட்டாரத்துல வித்துடுவேன். தேக்கைவிட நல்ல நிறமா இருக்கும்கிறதால பூவரசுக்கு மரியாதை ஜாஸ்தி. இருபது, முப்பது வயசுருக்குற மரத்துல... ரெண்டு பீரோ (ஆறரையடி உயரம், நாலரையடி நீளம் இரண்டடி அகலம்) ஒரு கட்டில் (7 அடி நீளம் 5 அடி அகலம்) செய்யலாம். இந்த மரத்தை வளர்க்கறதும் ரொம்ப சுலபம்தான்'' என்றவர், பூவரசு மரத்தை சாகுபடி செய்யும் முறைகளை விளக்கினார். அவற்றை பாடமாக இங்கே தொகுத்திருக்கிறோம்.

போத்து நடவு !

'பூவரசு, அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. கடும்கோடையில்கூட பசுமையாக இருக்கும். இதை போத்து (குச்சிகள்) மூலமாக நடவு செய்வது சிறந்தது. போத்துகளை, செங்குத்தாக நடவு செய்தால், மரம் வளர்ந்த பிறகு, நிறைய பொந்துகள் உருவாகும். அதனால் படுக்கை முறையில் பதியன் போட்டால், இந்த பிரச்னையைத் தவிர்க்கலாம்.6 அடி நீளம், அரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். இதில் முக்கால் பங்கு மணலையும், காய்ந்த சாணத்தையும் போட்டு, 6 அடி நீளம் கொண்ட பூவரசம் போத்துகளை பதித்து, மண்ணால் மூடி, காற்றுப் போகாமல் மிதித்து, தண்ணீர் தெளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும்.

அடுத்த சில வாரங்களில், ஒரு போத்தில் இருந்து பல துளிர்கள் வெடித்து வந்திருக்கும். போத்தின் இரண்டு ஓரங்களிலும் உள்ள செழிப்பானத் துளிர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை கையால் ஒடித்து விட வேண்டும். அதன் பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது. இப்போது மரத்துக்கு மரம், வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளி இருக்கும். இதுபோல் பதியன் போட்டால்... ஒரு ஏக்கர் நிலத்தில் 600 போத்துகளைப் பதியன் செய்யலாம். மொத்தம் 1,200 மரங்கள் உருவாகும்.

பராமரிப்பு தேவையில்லை !

நடவு செய்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை. ஆண்டுக்கு ஒரு முறை மரங்களை கவாத்து செய்ய வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவையில்லை. 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மரத்தை விட்டு, ஒரு மரத்தை வெட்டி விற்பனை செய்யலாம். இப்படி 600 மரங்களை வெட்டலாம். அடுத்து ஐந்து ஆண்டுகள் (நடவு செய்த 10-ம் ஆண்டில்) கழித்து ஒரு மரம் விட்டு ஒரு மரம் என்ற கணக்கில் 300 மரங்களை வெட்டலாம். அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து (நடவு செய்த 15-ம் ஆண்டில்) மீதி மரங்கள் நன்கு பெருத்திருக்கும் அப்போது அவற்றை வெட்டலாம்.'

நிறைவாக வருமானம் பற்றி விவரித்த மாரியப்பன், ''அஞ்சாம் வருஷம் வெட்டுறப்போ ஒரு மரத்துக்கு ஆயிரம் ரூபாய் விலை கிடைக்கும். 600 மரங்கள் மூலமா 6 லட்ச ரூபாயும்; பத்தாம் வருஷம் வெட்டுறப்போ, மரத்துக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம், 300 மரங்களுக்கு 9 லட்ச ரூபாயும்; 15-ம் வருஷத்துல மிச்சமிருக்குற 300 மரங்கள் மூலமா மரம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் 15 லட்ச ரூபாயும் வருமானமா கிடைக்கும். மொத்தத்துல 15 வருஷத்துல 30 லட்சம் ரூபாய் வருமானம் பார்த்துட முடியும். 

மதிப்புக்கூட்டினால் அதிக லாபம் !

மரமா விக்காம... நாமளே கட்டில், பீரோனு செஞ்சு விக்கிறப்போ கூடுதல் லாபம் கிடைக்கும். சாதாரணமா ஒரு பீரோ 30 ஆயிரம் ரூபாய்க்கும், கட்டில் 12 ஆயிரம் ரூபாய்க்கும் விலை போகும். 20, 25 வருஷ மரத்துல ரெண்டு பீரோ, ஒரு கட்டில் செய்யலாம். இதன்படி பாக்கும்போது ஒரு மரத்துல இருந்தே,72 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதுல, வெட்டுக் கூலி, அறுப்புக் கூலி, இழைப்புக் கூலி, ஆசாரிக் கூலி, தாழ்ப்பாள் மாதிரியான உதிரி சாமான்கள் எல்லாம் சேர்த்து 28 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவானாலும், ஒரு மரத்துல இருந்து 44 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்.

மரத்தை அறுத்து துண்டு போட்டு, இழைச்சும் விக்கலாம். இருபதுல இருந்து முப்பது வயசுள்ள மரத்துல சராசரியாக 25 கன அடிக்கு மரத்துண்டுகள் கிடைக்கும். ஒரு கன அடிக்கு சராசரியா 1,200 ரூபாய் விலை கிடைக்குது. ஒரு மரத்துல இருந்து செலவெல்லாம் போக, 22 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும்'' என்ற மாரியப்பன் நிறைவாக,

வீழ்ந்தாலும் வளரும் !

''இந்த மரம் புயல் அடிச்சாகூட கீழே சாயாது. ஒருவேளை கீழே சாஞ்சாலும் நிமித்திவிட்டா... திரும்பவும் வேகமா தழைச்சுடும். நிமிர்த்தி வைக்காவிட்டாலும் கூட, சாய்வாகவே வளரும். இதுவே தேக்கு மரமா இருந்தா, புயல்ல கீழ சாஞ்சுட்டா மறுபடியும் பிழைக்காது. ஒவ்வொரு வருஷமும் கவாத்து பண்ற கிளைகளை போத்தாவும் வித்துடலாம். அதுவும் நல்லா விற்பனையாகுது. பதியன் போடுறதுக்கும் வாங்கிக்கறாங்க.விவசாயிங்க மனசு வெச்சாங்கனா... அதிகளவு பிராண வாயுவை உற்பத்தி பண்ற பூவரசு மரங்களை நடவு செஞ்சு சுற்றுப்புறத்தையும் சுத்தமாக்கி, தங்களையும் வளமாக்கிக்க முடியும்'' என்றார், சந்தோஷமாக! 

தொடர்புக்குமாரியப்பன், செல்போன்: 97881-88463.

**************

தென்னைக்கு அருகில் நடும்போது கவனம் ! 

தஞ்சாவூர் மாவட்டம், ஒதியடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வேதையனும் அதிக எண்ணிக்கையில் பூவரசு மரங்களை வளர்த்து வருகிறார்.

தன்னுடைய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்த வேதையன், ''எனக்கு 10 ஏக்கர்ல தென்னந்தோப்பு இருக்கு. 15 வருசத் துக்கு முன்ன தோப்புல வேலி ஓரத்துலயெல்லாம் நாலடி இடைவெளியில ஐநூறு பூவரசு போத்துகளை செங்குத்தா நடவு செஞ்சேன். அதுல நானூறு மரங்கள் நல்லா வளந்துருந்துச்சு. பத்து வருஷம் கழிச்சு நூறு மரங்களை மட்டும் வெட்டி ஒரு மரம் 3 ஆயிரம் ரூபாய்னு வித்தேன்.

ஒரு சில இடங்கள்ல தென்னை மரத்துல இருந்து நாலடி தூரத்துலயே பூவரசு மரம் இருந்தது. அந்த இடத்துல எல்லாம், தென்னையில சரியா காய் காய்க்கல. அதனால, தென்னைக்குப் பக்கத்துல நடும்போது கவனமா இருக்கணும். குறைஞ்சது பத்தடிக்கு மேல இடைவெளி விடணும்'' என்கிறார், வேதையன். யூரியாவுக்கு மாற்று பூவரசு இலைகள் !

பூவரசின் இலைகளையே அடியுரமாகப் பயன்படுத்தி வருகிறார் மாரியப்பன். அதைப் பற்றிப் பேசியவர்,

''ஒரு மரத்துல இருந்து வருசத்துக்கு குறைஞ்சபட்சம் 500 கிலோ இலை கிடைக்கும். இந்த இலைகள் ரொம்ப அருமையான உரம். இதுல தழைச்சத்து நிறைய இருக்கு. யூரியாவுக்கு பதிலா பூவரசு இலைகளத்தான் மூணு ஏக்கருக்கு அடியுரமா பயன்படுத்தி நெல் சாகுபடி பண்றேன். பசுமையான இலைகளை வயல்ல பரப்பி தண்ணீர் கட்டிட்டா, ரெண்டு மூணு நாள்ல மட்கி உரமாகிடும். பொதுவாவே, பூவரசு மரத்தடியில எப்பவுமே ஈரம் இருக்கும். அதுல சருகெல்லாம் விழுறதால தானாவே மண்புழுக்கள் வர ஆரம்பிச்சுடும். அதனால அந்த இடத்துலேயே பூவரசு சருகுகளை வெச்சு மண்புழு உரமும் தயாரிச்சுக்குறேன்'' என்று புதிய தொழில்நுட்பம் சொன்னார்.


Friday, September 14, 2012

காடு மாதிரி வளர்த்தால்.. காசு பார்க்க முடியும்!

எனக்க 22 ஏக்கர் நிலம் இருக்கு. 5 ஏக்கரில் சவுக்கும், 5 ஏக்கரில் தைல மரமும் இருக்கு. மீதி 12 ஏக்கரில் நெல் சாகுபடி பண்ணிட்டிருக்கிறேன். ஆனால், எங்க பகுதியில்  வெலையாட்கள் கிடைப்பது குதிரைக் கொம்புதான். அதே போல், உழைப்பிற்கு ஏற்ற லாபமும் இல்லாததால், நெல் சாகுபடியை முழுயைாக கைவிட்டுட்டு, மொத்தத்திற்கும் மரங்களை வைக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கான ஆலோசனை கிடைக்குமா என்று பசுமை விகடனின் நேரடி குரல் பதிவு சேவை மூலமாக ஆதங்கக் குரலைப் பதிவு செய்திருந்தார், புதுக்கோட்டை மாவட்டம், கீழ்ச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன். இவருக்கு ஆலோசனை சொல்ல புதுக்கோட்டை மாவட்டம், சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த மரம் தங்கசாமி.

பாலசுப்ரமணியத்திடம் பேசி, பிரச்சனையை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட தங்கசாமி.. இதற்காக ஒட்டு மொத்தமாக நெல் உற்பத்தியையே கைவிடறேன் என்று சொல்வது நமக்கும் நல்லதல்ல நாட்டிற்கம் நல்லதல்ல. அதற்காக தொடர்ந்து அவஸ்தைப்பட்டுக் கொண்டே இருக்கணும் என்ற அவசியமும் இல்லை. அதிகமான பரப்பில் நெல்லு பயிரிட்டால்தானே எல்லா பிரச்சனையும். இரண்டு ஏக்கரில் ம்டும் நெல் பயிர் செய்து பாருங்க. பிரச்சனைகள் மிகவும் குறைந்துவிடும். வசதிபட்டால், அதையே தொடர்ந்து செய்ய ஆரம்பிச்சுடுங்க. மீதி நிலத்தில் மரங்களை வைத்து சமாளித்துவிடலாம் என்றபடியே நிலத்திற்குள் நடக்கத் தொடங்கினார்.

சரிங்கய்யா, நீங்க சொல்வது போலவே நெல்லுக்கு இரண்டு ஏக்கர் ஒதுக்கிடறேன். மீதியு்ள்ள பத்து ஏக்கரில் குமிழ், தென்னை என்ற வைத்து விடட்டுமா எனக் கேட்டார் பாலசுப்ரமணியன். உடனே குனிந்து, ஒரு குச்சியால் மண்ணை நன்கு கிளறி கையில் அள்ளிப் பார்த்த தங்கசாமி, இது ஈழக்களி.. லேசா மழை பெய்தாலே, சொதசொத என்று ஈரம்  கோத்துக் கொள்ளும்.அதனால், குமிழ் சரியாக வராது. நாட்டுத் தேக்கும் கூட சரியாக வளராது. தென்னை நல்லாவே வளரும். என்று சொன்னார். உடனே ஆர்வமான, பாலசுப்ரமணியன், அப்படினால் பத்து ஏக்கரிலுமே தென்னை வைத்துவிட வேண்டியதுதான் என்றார்.

தொடர் வருமானம் தரும் மூங்கில்
தென்னைக்கு தண்ணீர் செழிம்பாக இருக்கணும். உங்கப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால், எதிர்காலத்திலும் மனசை வைத்துதான் எந்த ஒரு முடிவையும் எடுக்கணும். முதலில் இரண்டு ஏக்கரில் மட்டும் 25 அடி இடைவெளயீல் தென்னை நடவு செய்ங்க. ஏக்கருக்கு 75 தென்னை வரும். இரண்டு தென்னைக்கு நடுவில்  நாட்டு ரக எலுமிச்சைக் கன்றை நடுங்க. அடுத்ததாக.. இரண்டு ஏக்கர் ஒதுக்கி, 15 அடி இடைவெளியில் முள்ளில்லாத மூங்கில் வைங்க. இந்த மண்ணில் அது நன்றாக வளரும். அந்த மூங்கிலே ஏராளமான தழைகளை உதிர்க்கறதால், மண்ணும் வளமாகும். அடுத்த ஐந்தாவது வருடத்தில் இருந்து தொடர் வருமானமும் கிடைக்கும். என்று சொல்லிக் கொண்டே வந்தவர்.. ஒரு குறிப்பிட்ட பகுதியில் நின்று கொஞ்சம் ஆழமாக யோச்சித்தார்.. பிறகு, இந்த இடத்தில் நீர்ப் பிடிப்பு அதிகமாக இருக்குமே எனக் கேட்டார்! ஆமாங்க, மழைக்காலங்களில் இந்த இடத்தில் மட்டும் அளவிற்கு அதிகமாகவே ஈரம் கோத்துக் கொள்ளும் என்றார் பால சுப்ரமணியன்.

தண்ணீர் தேங்கினால் சவுக்கு!
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடந்த தங்கசாமி, அப்போ இந்தப் பகுதியில் இரண்டு ஏக்கரில் சவுக்கு நடவு பண்ணுங்க. நான்கடி இடைவெளி விட்டாலே போதுமானது. ஆக, ஆறு ஏக்கருக்கு முடிவாயிடுச்சு. மீதி இருக்கும் 4 ஏக்கரில் சப்போட்டா, மாதுளை, கொய்யா, மா, நெல்லி, நாவல், இலந்தை, முந்திரி, விளா, கிளாக்காய், சீதா, பூவரசு, புளி, வேங்கை, வேம்பு, ரோஸ்வுட், மகோகனி எல்லாத்தையும் கலந்து நடவு செய்யுங்க. ஒவ்வொரு கன்றிற்கும் 15 அடி இடைவெளி விடணும். ஒரே வகையான மரம் அடுத்தடுத்து வரக்கூடாது. ஒரு பழ மரம் வைத்தால்.. பக்கத்தில் மரவேலைப்பாடுகளுக்கு உதவக்கூடிய மரத்தை வைக்கணும். இப்படி மாற்றி மாற்றி வைத்து, காடு மாதிரி வளர்த்தால்.. நல்ல காசு பார்க்கலாம். வேலையாட்களுக்காகவும் கஷ்டப்பட தேவையிருக்காது. இப்ப நான் சொல்லி இருக்கும் மரங்கள் எல்லாமே.. இந்த மண்ணில் நன்றாக வளரக்கூடிய மரங்கள்தான்.

வேம்பு இருந்தால், சந்தனமும் வளரும்!
அப்போ பால மரத்தை இங்க வைக்கக் கூடாதா? என்று ஏமாற்றத்துடன் கேட்டார் பாலசுப்ரமணியன். இந்த மண்கண்டத்திற்கு அது சரியாக வராது. ஆசைப்பட்டால் ஒன்று, இரண்டு வைச்சு பாருங்க என்றார் தங்கசாமி. இங்க வேம்பு நல்லா விளைவதால் கண்டிப்பாக சந்தன மரமும் நல்லா வளரும். நான் சொன்ன பட்டியலில் சந்தன மரத்தையும் சேர்த்துக்கோங்க. ஓய்வெடுக்கும் கொட்டகையைச் சுற்றி, 15 அடி இடைவெளியில் பிலானிச், மந்தாரை, அசோகா, கொன்றை, புங்கம், சில்வர் ஓக், வேம்பு மரங்களை வளருங்கள். நாம ஓய்வெடுக்கும் இடத்தில் நிழல் முக்கியம். பிலானிச் மரத்தில் அழகான பூக்கள் பூக்கும். அது மனதிற்கு ரம்மியமாக இருக்கும் என்றார். வேலி ஓரத்தில் ... பூவரசு, வேம்பு, புளி, பனை, புங்கன், சவண்டல், கிளுவை மாதிரியான மரங்களை 10 அடி இடைவெளியில் வைங்க. இது முதல் அடுக்கு காற்றுத் தடுப்பு வேலியாக பயன்படும். அதிலிருந்து 6 அடி உள்ளார தள்ளி, பூவரசு, வேம்பு, புங்கம், புளி, பனை, சவண்டல் மரங்களை 10 அடி இடைவெளியில் நட்டு, இரண்டாமடுக்கு தடுப்பு வேலியை உருவாக்கணும். முதல் அடுக்கில் உள்ள மரங்களும், இரண்டாம் அடுக்கில் உள்ள மரங்களும் முக்கோண நடவு மாதிரி இருக்கணும்.

ஊடுபயிரிலும் வருமானம்!
மரக்கன்றுகளை நடுவதற்கு முன், முக்கியமான ஒரு வேலையைச் செய்தாகணும். முதலில் மூன்று சால் உழவு ஓட்டி, ஏக்கருக்கு நான்கு டன் அளவிற்கு தொழுவுரம் போட்டு, திரும்பவும் ஒரு சால் உழவு ஓட்டணும். ஏக்கருக்கு 20 கிலோ அளவிற்கு நவதானிய விதைகளை தெளித்துவிட்டு, 45 – ம் நாள் பூ பூக்கும் தருணத்தில் மடக்கி உழுதுவிடணும். அதற்கு அப்புறம் தனர் மர கன்றுகளை நடணும். நாம நடப்போற கன்றுகளோட வயது, உயரத்திற்கு  ஏற்ற மாதிரி குழி எடுக்கணும். அதில் தொழுவுரம், வேப்பம்பிண்ணாக்கு, மணல், மேல் மண் போட்டு நடவு செய்யணும். காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் விட்டாப் போதும்.

மரங்களுக்கு இடையில் ஐந்து வருடம் வரைக்கும் எள், தட்டைப்பயறு, பச்சைப்பயறு, கொள்ளு.. மாதிரியான பயிர்களை ஊடுப் பயிராக சாகுபடி செய்து ஒரு வருமானம் பார்த்துவிடலாம். முள்ளில்லா மூங்கில் மட்டும்  மூன்று வருடம் வரைக்கும் தான் ஊடுபயிராக சாகுபடி பண்ணனும் என்று பக்குவமாக சொன்ன தங்கசாமி, இதற்கெல்லாம் பெரிதாக பராமரிப்பு பார்க்க வேண்டியதில்லை. வேலையாட்களும் அதிகமாக தேவைப்படாது. தென்னை, பழ மரங்களில் ஐந்தாவது வருடத்திலிருந்தே வருமானம் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.  வேலைப்பாடுகளுக்கான மரங்களில் வருமானம் பார்க்க 20 வருடம் காத்திருக்கணும் என்று முடித்தார்.

தொடர்புக்கு
மரம் தங்கசாமி, செல்போன் : 97866  04177.
பாலசுப்ரமணியன், செல்போன் : 99420 77004.

சிறிய பரப்பு..அதிக மரங்கள்…பிரமிக்க வைக்கும் மர மகசூல்


சிறிய பரப்பில் அதிகமான மரங்கள் வளர்த்தால் அவைகளின் வளர்ச்சி சிறப்பாக அமையாது என்பார்கள். ஆனால், இவர் நிலத்தில் இந்த கருத்து பொய்யாகியிருக்கிறது. குறுகிய காலத்தில் எல்லா மரங்களுமே நன்றாக செழிப்பாக வளர்ந்திருக்கிறது என்று சிலாகிக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம் கழுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல். தஞ்சாவூரில் புத்தக நிலையம் மற்றும் மருந்துக்கடை நடத்தி வருடம் பட்டதாரியான சக்திவேல் கூடவே விவசாயத்தையும் விடாது தொடர்கிறார். பகல் பொழுதொன்றில் தோட்டம் சென்றோம். இரண்டு வயதே உள்ள மகோகனி, குமிழ்தேக்கு, வேங்கை, செஞ்சானம், ரோஸ்வுட் உ்ள்ளிட்ட மரங்கள் வளமாக வளர்ந்து நிற்க தோட்டத்தைச் சுற்றிலும் தென்னை, பனை, பூவரசு, வேம்பு, சுிசு மரங்களும் அலங்கரித்து நின்ற காட்சியைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தோம்.

இரண்டு வருடத்திற்கு முன்பு வரை நெல் சாகுபடி செய்த நிலம்தான் இது. இப்பொழுது செழிப்பான தோட்டமாக அளிப்பதற்கு காரணமே முறையான திட்டமிடல் தான் என்ற சக்திவேல் மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார்.

மொத்தம் 6  ஏக்கர் நிலம் இருக்கிறது. இது வண்டல் மண் பூமி. முழுக்க இரசாயன முறையில் நெல் விவசாயம் தான் செய்து கொண்டிருக்கிறார். மரம் வளர்ப்பிலேயும், இயற்கை விவசாயத்திலேயும் ஆர்வம் ஏற்பட்டதால், இரண்டு ஏக்கரில் மட்டும் மரங்கள் வளர்க்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார். ஏற்கனவே இந்த இரண்டு ஏக்கரை சுத்தி, வேலி ஓரத்தில் 40 வயதுள்ள 50 பனை: 10-15 வயதுள்ள 100 பூவரசு, 25 வேம்பு: 3 வயதுள்ள 80 தென்னை என்று இருக்கிறது. இப்பொழுது 300 பூவன் வாழை மரங்களும் வேலியில் இருக்கிறது. பொதுவாக வேலியோர மரங்களும் மாட்டு எரு கூட, கொடுப்பதில்லை. வாழைக்கும் கூட அப்படித்தான். அதனாலும்கூட, இந்த வாழை, மரங்கள் பூச்சி, நோய்த் தாக்குதல் இல்லாமல், திடகாத்திரமாக வளர்கிறது. மடல்கள் நன்றாக பரந்து விரிந்து, எப்பவும் பசுமையாக இருக்கிறது. இப்பொழுதுதான் தார் போட்டு, முதல் தாம்பு அறுவடைக்கு வந்திருப்பதாக கூறுகிறார். ஒரு தாருக்கு 225 காய்கள் வரை இருக்கிறது. பழங்கள் நல்ல சுவையுடன் உள்ளது. இந்தப் பழங்கள் 15 நாட்கள் வரை கெட்டுபோவதில்லை என்று சொன்னவர் புதிதாக மரம் வளர்ப்பில் இறங்கியதைப் பற்றிக் கூறுகிறார்.

இரண்டு ஏக்கரில்தேவையா அளவு குழி எடுத்து, 750 மகோகனி, 100 குமிழ்தேக்கு, 500 வேங்கை, 20 செஞ்சந்தனம், 500 ரோஸ்வுட், 750 முள்ளிள்ளா முங்கில் மரங்கள் என்று மொத்தமாக சேர்த்து 2 ஆயிரத்து 620 மரங்களை நடவு செய்திருக்கிறார். ஒவ்வொரு மரத்திற்கும் 6 அடி இடைவெளி விட்டு ஒரே வகையான மரங்கள் அடுத்தடுத்து இல்லாத மாதிரி நடவு செய்திருக்கிறார். அதிக எண்ணிக்கையில் மரங்கள் இருப்பதினாலட, நிறைய இலை தழைகள் உதிர்ந்து, மண் வளமாகிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, முள்ளில்லா மூங்கிலிலிருந்துஅதிக இலைகள் கிடைக்கிறது. இந்த மரங்களுக்கிடையில் வேறு மரங்கள் வைத்தோம் என்றால் சரியாக வளராது என்று சொல்லுவார்கள் ஆனாலும் எல்லா மரங்களும் நன்றாகத்தான் வளர்வதாக கூறுகிறார்.

முள்ளில்லா மூங்கிலில் பக்க வேர்கள் மட்டுமே இருப்பதனால், அது மண்ணிற்கு மேல் பகுதியில் உள்ள சத்துக்களை உணவாக எடுத்துக் கொள்கிறது. மற்ற வகை மரங்களுக்கு ஆணிவேர்கள் மட்டுமே அதிகமாக இருப்பதினால் இந்த மரங்கள் மண்ணிற்கு கீழ் உள்ள சத்துக்களை உணவாக எடுத்துக் கொள்கிறது. இங்கே உள்ள எல்லா மரங்களுமே சுமார் 10 முதல் 15 அடி உயரத்திற்கு வளர்ந்திருக்கிறது. கடுமையான கோடையிலும் கூட மரங்களில் கொ!சம் கூட வாட்டம் தெரிவதில்லை.  நடவு செய்ததிலிருந்து முதல் ஒரு வருடம் வரைக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்ததாகவும், பிறகு மாதத்திற்கு ஒரு முறை கொடுக்க ஆரம்பித்ததாகவும் கூறுகிறார். களைகளை நன்றாக மண்ட விட்டு, மூன்று மாதத்திற்கு ஒரு முறை, குபேட்டா ஓட்டி, மண்ணுக்குள்ளேயே புதைக்கிறோம். இதனால், களைகள் நல்ல பசுந்தாள் உரமாக மாறிவிடுகிறது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்தையும் சுத்தி, தலா 5 கிலோ மாட்டு எரு போட்டுகிட்டு இருக்கோம்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை பக்க கிளைகளை மட்டும் ஒடித்துவிட்டு கவாத்து செய்கிறார். அதனால் மரங்கள் நேராக வளர்கிறது. எதிர்காலத்தில் மரங்கள் பெரிதானாலும், இடைவெளி அதிகமாக தேவைப்படும். மரங்களோட முதிர்வுக்கு ஏற்ப வெவஇவேறு கால கட்டங்களில் வெவ்வேறு மரங்களை வெட்டி விற்பனை செய்தால் மீதம் இருக்கும் மரங்களுக்கு தேவையான இடைவெளி கிடைக்கும் என்ற தொழில்நுட்பங்களை விவரித்த சக்திவேல் நிறைவாக, 7-ம் வரடம் முள்ளில்லா மூங்கில் குத்துகளில் சில மரங்களை மட்டும் விட்டுவிட்டு மற்றவைகளை அறுவடை செய்யலாம். 8-ம் ஆண்டு குமிழ்தேக்கையும், 15-ம் ஆண்டு மகோகனியையும், 12-ம் ஆண்டு வேங்கையையும், 30-ம் ஆண்டு செஞ்சந்தனம், ரோஸ்வுட் மரங்களையும் அறுவடை செய்யலாம் என்று அறுவடை பற்றிய தகவலொடு முடித்தார் கச்திவேல்.

தொடர்புக்கு
சக்திவேல்
செல்போன் : 99441-44888

Sunday, August 5, 2012

மகோகனி மரம்


எங்கு  நோக்கினும் இப்போது மரம் வளர்ப்பு விழிப்புணர்வு பெருகி வருகிறது. பொதுவாக மரங்களினால் பல்வேறு பயன்கள் என்றாலும், சில மரங்கள் பொருளாதார ரீதியாக அதிக பயனை தருகிறது. உதாரணமாக மா மரத்தை எடுத்து கொள்வோம்.சீசனில் ஏராளமான மாம்பழங்களை தரும்.நமக்கு மாம்பழங்களை கடையில் வாங்கும் செலவு மிச்சம்.

இது போல் ,மனிதனுக்கு ஆதிகாலத்திலிருந்து மரங்கள் குடியிருப்புகளாக, கடலில் செல்ல கப்பல் தயாரிக்க உதவும் மூலப்பொருளாக, காய்கள், பழங்கள் தரும் உணவு பயிராக என்று எத்தனையோ வழிகளில் பயனுள்ளதாக இருந்து வந்திருக்கின்றன. மரங்கள் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை என்பது தான் உண்மை நிலை.

விலை உயர்ந்த மரங்கள்
 எத்தனையோ பயன்பாடுகள் இருந்தாலும், கட்டிடங்கள் கட்டும் போது நிலைக்கதவுகள், ஜன்னல்கள் வடிவமைக்க நீடித்து உழைக்கக்கூடிய, பார்ப்பதற்கு அழகாக காட்சி தரும் தேக்கு, ரோஸ்வுட் மற்றும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் படாக் மரங்கள் போன்ற விலை உயர்ந்த மரங்கள் தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கிலான எக்டரில் தரிசுநிலங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் எல்லாம் குறிப்பிடத்தக்க பயன்தரும் மரங்களை நட்டு வளர்த்தால் இறக்குமதி மரங்களுக்கு அவசியம் இருக்காது. கூடவே மரங்கள் அதிகமாக வளர்க்கும் போது மழை பொழிவும் அதிகம் ஏற்படும். விவசாயம் செழிக்கும்.

மரங்கள் வளர்ப்பு லாபம் நிறைந்த விவசாயமாக தற்போது வளரத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் நிலங்களில் நல்ல லாபம் தரும் மரங்களை நட்டு வளர்த்தால் குறிப்பிட்ட காலகட்டத்தில் நல்ல லாபத்தை தரும். இந்த மரங்கள் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதும் முக்கியம்.

மகாகொனி மிலியேசி
இப்படி விவசாயிகளுக்கு வளம் தரும் மரங்களில் ஒன்றாக இருப்பது தான் மகாகொனி மிலியேசி. மேற்கிந்திய தீவுகளை தாயகமாக கொண்டது இந்த மரம். டொமினிக் ரேபுப்ளிக் என்ற சிறிய நாட்டின் தேசிய மரம் வேறு.

பயிரிட
வேப்ப மரத்தின் இலையை போன்று கூட்டிலை உடையது. ஏப்ரல் மாதத்தில் மகாகொனி மரம் பூக்கும். 3.5 மீ நீளக் காம்புடைய பூங்கதிர்கள் 8 செ.மீ நீளத்தில் இருக்கும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த மரம் ஆண்டிற்கு 1000 மில்லி மீட்டர் மழை அளவு பெறும் இடங்களில் நன்றாக வளரும். வடிகால் திறனும், ஆழமான மண்கண்டமும் உள்ள இடங்கள் மககொனி வளர்க்க சிறந்த இடங்கள். மற்ற மரங்களை விட மககொனி மரத்திற்கு சத்து அதிகம் கொண்ட மண்வாகு தேவைப்படும்.

தமிழ்நாட்டில் ஒரளவு நீர்செழிப்புள்ள இடங்களில் பயிரிடலாம். மதுரை மாவட்டத்தின் வைகை ஒடிவரும் நீர்பிடிப்பு பகுதிகள் (ஆற்றுப்படுகைகள்) உள்பட நீர்செழிப்புள்ள மேட்டுப்பாங்கான இடங்கள் ஏற்றவை. செவ்வல் கண்மாய் கரைகளும் ஏற்றவை. தனியார் தோட்டங்களில் காற்றுத்தடுப்பு வரிசைகளில் நடலாம். நகரங்களில் அதிக மழையுடைய பகுதிகளில் கட்டிட வளாகங்களில் ஒரு வரிசையாக மகாகொனி மரங்களை நடலாம். மாடிகளில் உள்ளவர்களுக்கு காற்றை வடிகட்டி கொடுக்கும்.

நல்ல மகாகொனி மரம் உருவாக 20 ஆண்டுகள் பிடிக்கும். நடும் பொழுது 10*10 மீட்டர் இடைவெளியில் நடலாம். பின்னர் களைகளை நீக்கி கொத்திக் கொடுக்க வேண்டும். நிழல் உள்ள இடங்களில் நட்டால் வளர்ச்சி குன்றிவிடும். பாசனமளித்தால் கன்றுகளில் 90 சதவீதம் துளிர்த்து விடும். இரண்டு ஆண்டுகளில் 96 செ.மீட்டர் அளவிற்கு உயர்ந்து வளரும். எனவே பாசனமுள்ள இடங்களில் தொடக்க காலத்தில் நீர் ஊற்றி வளர்ப்பது நல்லது. 

பயன்கள் 
இந்த மரத்தை அழகிய வேலைப்பாடுகள் உள்ள மேஜை, நாற்காலிகள், சட்டமிட்ட கதவுகள், பீரோக்கள் மற்றும் பல கடைசல்களுக்கும் ஏற்றது. இசைக்கருவிகள் செய்ய ஏற்றது. கப்பல் கட்டுவதற்கும், பல வகையான கட்டுமான பொருட்கள் செய்வதற்கும், பென்சில் செய்வதற்கும் கூட ஏற்ற மரம் இது.

என்றைக்கும் நல்ல வளர்ச்சியுள்ள கட்டுமானத்துறைக்கு மரத்தின் தேவைப்பாடு அதிகம் இருப்பதால் மர விவசாயம் எதிர்காலத்தில் நல்ல லாபம் தரும் தொழிலாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை. இந்த மரம் பற்றி விவரங்கள் அறிய அந்தந்த மாவட்டங்களில் உள்ள வனத்துறை அலுவலங்களை அணுகலாம்.

Sunday, June 3, 2012

சொர்க்க மரம்


இம் மரம் மூன்று வருடங்களில் பூத்து காய்க்கும் தன்மை வாயந்ததாகும். வருடத்தில் ஒரு முறை, டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் பூக்கும். 4-6 வருடத்தில் காய்க்கத் தொடங்கி மேலும் 4-5 வருடங்களில் நிலையான காய்ப்புத்தன்மை அடைந்துவிடும். கீழே விழும் காய்கள் (இளஞ்சிவப்பு வகைகளில் கரு ஊதா நிற காய்கள் மற்றும் பச்சை வகைகளில் வெளிர் பழுப்பு நிற காய்கள்) மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். இடத்தின் சூழல் மற்றும் தட்பவெப்ப நிலையினை கொண்டு காய்க்கும் பருவகாலம் மற்றும் வளர்ச்சி காலம் வேறுபடும். காய்காய்த்து பின் வளர்ச்சியடைந்து பழுப்பதற்கு 1-2 மாதங்கள் ஆகும். காயானது நீள்வட்ட வடிவத்தில், 2-2.5 செ.மீ நீளம் கொண்டு, மெல்லிய கடின மேல்தோலுடன், சாறு போன்ற சதைப்பகுதியுடன் இருக்கும்.
அசெய்டுனோ, சைமரூபா அல்லது சொர்க்க மரம் என்று பொதுவாக அழைக்கப்படும் இம்மரம் நடுத்தர அளவுடனும், பசுமை மாறா தன்மையுடனும் (7-15 மீ உயரம்), ஆணிவேர் மற்றும் நீள உருளை வடிவ தண்டுடன் இருக்கும். மத்திய அமெரிக்காவின் எல் சால்வடோர் பகுதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட அன்னிய தோற்றமாகும். கால்நடைகள், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் இம்மரத்தினை உண்காது என்பதால் இதற்கு தனிகவனம் தேவையில்லை (ஷ்யாம் சுந்தர் ஜோஷி மற்றும் குழு 1996).
பயன்கள்:
சைமரூபா மரத்தின் அனைத்து பாகங்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இதன் விதைகளில் 50-65 சதவிகிதம் உண்ணக்கூடிய எண்ணெய் இருப்பதனால் “வனஸ்பதி” என்ற சமையல் எண்ணெய் தயாரிக்க உபயோகப்படுகின்றது. 1950ம் வருடம் முதல் எல்சால்வடோர் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் இந்த எண்ணெய் உணவு பயன்பாட்டிற்காக மன்டியா வெஜிடல் “நைவ்” (Manteea Vegetal ‘Nieve’) என்ற பெயரில் தயாரிக்கப்படுகின்றது. தொழிற்சாலைகளிலும், தரமான சோப்புகள், உயவுப் பொருள்கள், சாயம், மெழுகூட்டு, மருந்துப்பொருட்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் இவ்வெண்ணெய் உபயோகப்படுத்தப்படுகின்றது. (ஷ்யாம்சுந்தர் ஜோஷி மற்றும் சாந்தா ஹையர்மத், 2000). எண்ணெய் தயாரிப்பில் கிடைக்கும் புண்ணாக்கில் அதிக சதவிகிதம் புரதச்சத்து (64%) இருப்பதால் அவற்றில் உள்ள நச்சுப்பொருட்கள் நீக்கப்பட்டு கால்நடை தீவனமாகும் இயற்கை உரமாகவும் உபயோகப்படுத்துகின்றது. காய்களின் உள்பகுதி அட்டை தயாரிப்பில் பயன்படுகின்றது. பழத்தின் 60 சதவிகிதம் பழக்கூழ் என்பதால் அதனில் 11 சதவிகிதம் சர்க்கரைச் சத்து உள்ளதாலும் பழச்சாறு மற்றும் நொதித்தல் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. இதன் இலை குப்பை மண் புழுக்களுக்கு சிறந்த உணவு என்பதால் நல்ல உரமாக பயன்படுகின்றது. இலை மற்றும் மரப்பட்டைகளில் ‘குவர்சின்’ என்ற வேதிப்பொருள் அமீபியாசிஸ், வயிற்றுப்போக்கு மற்றும் அலேரியா போன்றவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

Wednesday, January 25, 2012

பதிமுகம் மரம் வளர்ப்பு


















பதிமுகம் மரம் முட்களுடன் பத்து மீட்டர் உயரம் வளரும் குறு மரம். இதன் குறுக்களவு சுமார் 15.30 செ.மீ. விட்டமாகும். ஒரு வருடத்தில் செடிகள் 3-5 மீட்டர் உயரம் வரை வளரும். இலைகள் இளம் பச்சை நிறமுடைய கூட்டிலைகளாக முதல் வருடத்திலேயே பூக்க ஆரம்பிக்கும்,இதற்கு செம்புறை மன் உகந்தது. இது வறட்சியைத் தாங்கி பல் வேறுபட்ட கால நிலையிலும் வளரும். இது வறண்ட வெப்ப மண்டலம், மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் சிறப்பாக வளரும். இந்த மரம் முதிரவடைவதற்கு 8 வருடமாகும். இது விதை வழி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. தெனைக்குஇடையெ  ஊடுபயிராகவும் வளர்க்கலாம்.

பதிமுகம் மரம் இயற்கை சாயம் தயாரிக்கவும், ஆயுர்வேத மருந்து தயாரிக்கவும் கேரள வியாபாரிகள் அதிகம் வாங்குகின்றனர். இந்த மரத்தில் இருந்து இதய நோய் சம்பந்தப்பட்ட மருந்து தயாரிக்கப்படுகிறது. ஏழாண்டுக்கு பிறகு இந்த மரங்கள் அதிகம் பயன்தரக்கூடியது. குறைந்தளவு தண்ணீர் போதும். மரத்தின் கிளைகள், பட்டைகள் ஆகியவை கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.

பயன்கள்:
இதன் மரக்கட்டைத் தூளை உபயோகித்து மிகச்சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பானாக கேரள மாநிலத்தில் 95% வீட்டிலும் உணவகத்திலும் தினமும் குடிதண்ணீர் சுத்திகரிக்கப் படுகிறது அரிய மருத்துவ குணமிக்க இம்மரத்திலிருந்ந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளால் குறிப்பிட்ட வகையான கேன்சர் குணமாகிறது.

சர்கரை நோய் கட்டுப்படுகிரது, இரத்த அழுத்தம் கட்டுப் படுத்தப் படிகிறது. சிறுநீரகக் கோளாறுகள் சீரடைகிறது. மூலநொய் குணமடைகிறது. கொழுப்பு விகிதம் சமச் சீராகிறது. வயிறு சம்மந்தமான நோய்களுக்குச் சரியான பலனளிக் கின்றது. சரும நோய்சரியாறது.

பூ, இலைகள், ஒப்பனை அழகு சாதனப் பொருட்களாகிறது. இயற்கையான நிறமேற்றுப் பொருளுக்கான அதி அற்புத உற்பத்திப் பொருளாகிறது 1000 மடங்கு எதிர்கால தேவையை நிவர்தி செய்யும்திறன் மிக்கது. இதன் மையத்தண்டில்அடங்கியுள்ள 'பிரேசிலின்' என்ற சிகப்புச் சாயம் காற்றில்பிராணவாயுவுடன் சேரும் போது 'பிரேசிலியன்' வண்ணமாக மாறுகின்றது.

இச்சாயம் நீர், வெளிச்சம் மற்றும் வெப்பத்தால் பாதிப் படையாத, அறிப் புண்டாக்காத முகப் பூச்சுக்கள் தயாரிப்பில் பயன் படுகிறது. முதிர்ந்த மரத்தின் மையப்பகுதியினின்று பெறப்படும் சாயம் தோல்,பட்டு, பருத்தியிழை, கம்பளி, நார், காலிகோ, அச்சுத்தொழில், மரச்சாமான்கள் வீட்டுத்தரை, சிறகு, மருந்துகள் மற்றும் பல்வேறுபட்ட கைவினைப் பொருட்களை வண்ண மூட்டப் பயன் படுத்தப் படுகிறது. பத்தமடை கோரைப் பாய்கள் பதிமுக வண்ணத்தால் சாயமூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பதிமுக சாயம் 'கயா' என்னும்மரச் சாயமுடன் கலக்கும் போது கறுப்பு, ஊதா மற்றும் சிகப்பு வண்ணச் சாயங்கள் உருவாக்கப் பட்டு அவை பனைஒலை, மற்றும் தாழை, கைவினைப் பொருட்களை வண்ணமூட்டப் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய மருத்துவத்தில் பயன்படும் 'லூக்கோல்' என்னும் மருந்தில் பதிமுகம் பயன் படுத்தப்படுகின்றது. இது கற்பப்பையினுள் கருவி மூலம் சோதனை செய்யும் போது உதிரம் கொட்டுதல் போன்றவற்றை மட்டுப் படுத்திகிறது. இலைகளினின்று பிரித் தெடுக்கப்படும் எண்ணெய் பாக்டீரியா, பூஞ்சாணம், போன்றவற்றிக்கு எதிராகப்பயன் படுகின்றது. மிக அதிக அளவில் கரியமில வாயுவை கிரகித்துக் கொள்வதுடன் மிக அதிக அளவில் பிராண வாயுவைவெளிப்படுத்தி சுற்றுப்புறச் சூழலை அற்புதமாக பாதுகாக்கிறது. மழை வளத்தைத்தூண்டுகிறது.


வேறுபெயர்கள்: சப்பான் மரம்,. பதாங்கம், பதாங்கா, கிழக்கிந்திய செம்மரம், சாயக்கட்டா.