Monday, October 29, 2012

பச்சைத் தங்கத்தில் பொம்மை செய்வோம்!

''மனிதனை நம்புறதைவிட மண்ணையும் மரத்தையும் நம்பலாம். இன்றைய சூழ்நிலையில் நெல், தென்னை விவசாயத்தைவிட மரம் வளர்ப்புலதான் கணிசமான லாபம். அதற்கு நானே சாட்சி'' என தன்னைச் சந்திப்பவர்களிடம் எல்லாம் பூரிப்போடு சொல்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் வசிக்கும் ராமநாதன். வானம் பார்த்த பூமியில் மரத்தை வளர்த்து, மழையை எதிர்பார்க்கிறேன். நான் மண்ணுக்குச் செய்றேன். மண் எனக்கு செய்யுது. பொது நலத்திலும் நான் நிறைவான வருமானத்தோடதான் வாழறேன்


அவரது வீட்டின் முகப்பில் பசுமைத் தோட்டம்  எனப் பெயரிடப்பட்டு இருந்தது. உள்ளே சென்றதும் ஏதோ காட்டுக்குள் நுழைந்த உணர்வு. பலவிதமான மரங்கள் ஒன்றை ஒன்று தழுவி கலப்படம் இல்லாத காற்றை வீசிக்கொண்டு இருந்தன.

''இந்த மரங்களாலதான் பிள்ளைகளோட திருமணத்தையே செஞ்சு முடிச்சேன். ஒரு ரூபாய் கடன் வாங்கலை. சொத்தில் ஒரு பிடி மண்ணை நான் விற்கலை. எல்லாம் மரம்தந்த வரம். மரம் வளர்ப்புல பலருக்கு விருப்பம் இல்லாம இருக்கக் காரணமே, உடனடியான பலன் எதுவும் கிடையாது என்கிற எண்ணம்தான். மற்ற விவசாயத்துல செலவுகள்போக கிடைக்கிற லாபத்தைவிட மரங்களால பலமடங்கு அதிகம். என்னை பார்த்து நிறையப்பேர் மரம் வளர்ப்புல இறங்கி இருக்காங்க. நானும் அவங்களுக்கு என்னால் முடிஞ்ச உதவிகள் செய்றேன்'' என்றார்.

தோட்டத்தைச் சுற்றிப்பார்க்கத் தொடங்கினேன். ஆங்காங்கே பறவைகளுக்காக சிறிய தண்ணீ ர் தொட்டிகள் உள்ளன. அவைகள் மூலமாக, பல்வேறு மர விதைகள் கிடைத்தனவாம். '' இங்கே 120 வகையான மரங்கள் இருக்கின்றன. நம் மண்ணுக்கான மரங்கள் பலவற்றை நாம் புறக்கணிச்சுட்டோம். அதனால், நம் பழமையான மரங்களையும் தேடிக்கிட்டு இருக்கேன்'' என்றவர் ஒவ்வொரு மரத்தைப்பற்றியும் சொல்லி சிலிர்க்க ஆரம்பித்தார்.

''இந்த மரத்தின் பெயர் கருங்காலி. பச்சைத் தங்கம் என மர ஆர்வலர்கள் அழைப்பாங்க. இந்த மரத்தில்தான் குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகள் செய்வாங்க. சாதாரணமாக, விளையாட்டுப் பொருட்களை புள்ளைங்க வாயில்வைக்கும். ஆனா,இந்த மரம், நோய் நீக்கி. அதனால், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இதோ... இந்த ஈர பலாமரக் காய்களைச் சமைச்சா, அசைவ கறிபோலவே இருக்கும். இதன் பெயர் பாம்பு கொல்லி. இந்த மரம் இங்கே கிடைக்காது. மலைப் பிரதேசங்கள்லதான் கிடைக்கும். இது இருக்கும் இடத்தைச்சுத்தி 100 அடி சுற்றளவில் எந்தப் பாம்புகளும் வராது. இரவு நேரத்துலகூட நான் பயம் இல்லாம தோட்டத்தைச் சுத்திவர இந்த மரம்தான் காரணம்.

குமிழ் மரம் ஆஸ்திரேலிய மரம். ஏழு ஆண்டுகள்ல வளர்ச்சி அடைஞ்சுடும். செயற்கை கை, கால்களை இதுலதான் செய்வாங்க. எடை குறைவானது. செஞ்சந்தன மரம் ஜப்பான் நாட்டுல பாதுகாப்புக்காகப் பயன்படுத்துறாங்க. இந்த மரத்தை ஊடுருவி அலைகற்றைகள் வர முடியாது. மகோகனி மரத்துலதான் வெள்ளை மாளிகை கட்டப்பட்டது. கொக்கு மந்தாரையும் அந்தி மந்தாரையும் பில்லி சூன்யம் நெருங்கவிடாம செய்யும்'' என விவரித்துக்கொண்டே சுற்றிக்காட்டினார். இங்கே வருடந்தோறும் வனத் துறையில் இருந்து மாணவர்கள் பயிற்சிக்காக வருவார்களாம்.

''எனக்கு பணத் தேவைகள் வரும்போது மரத்தை விற்றுவிடுவேன். அந்த இடத்தில் மரக் கன்று ஒன்றை உடனே நட்டுவைத்து விடுவேன். யாராவது மரம் வளர்க்க ஆசைப்பட்டால் சொல்லுங்கள். நான் அவர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன்'' என்ற ராமநாதன்.

சி.சுரேஷ்  

Sunday, October 14, 2012

புதையல் கொடுக்கும் பூவரசு



மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை. அதுமட்டும்மல்ல இவற்றினால் செய்யப்படும் பிரோ, கட்டில் போன்ற பொருட்களுக்கும் தனிமதிப்புண்டு அத்தகைய பூவரசு மரத்தை வணிகரீதியாக வளர்ப்பதை பற்றிபார்ப்போமா......!

ஏக்கருக்கு 1,200 மரங்கள். ஐந்தாம் ஆண்டு முதல் வருமானம். பராமரிப்புச் செலவு இல்லை. 

இதய வடிவிலான இலைகள்... மஞ்சள் நிற மலர்கள், அடர்ந்த நிழல்... குளிர்ந்தக் காற்று... இவைதான் பூவரசு மரத்தின் அடையாளம். கிராமத்துச் சிறுவர்கள், இம்மரங்களின் இலைகள், காய்களை வைத்து விளையாடுவார்கள். இதன் போத்துகளை திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பயன்படுத்துவார்கள்.அதிகளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் ஆற்றல் படைத்தது என்பதால்... கமலை ஏற்றத்தில் நீர் இறைக்கும்போது மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரங்களைத்தான் கிணற்று மேட்டில் நடவு செய்திருப்பார்கள்.

இப்படிப் பண்டை காலத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு பின்னிக் கிடக்கும் பூவரசு... 'நாட்டுத் தேக்கு' என்று புகழப்படும் அளவுக்கு, வலிமையான மரமும்கூட. அதனாலேயே... இந்த மரங்களை வெட்டி, தூண்கள், ஜன்னல்கள், கதவுகள் என பயன்படுத்துவது தொடர்கிறது.

தேக்கு, குமிழ் போன்ற மரங்களுக்கான தேவை இருப்பதால், அவற்றை புதிது புதிதாக அதிக அளவில் வளர்த்தெடுக்கிறார்கள். ஆனால், அதேபோல, பெரிய அளவில், பூவரசு மரத்தை புதிதாக உருவாக்கத் தவறிவிட்டதால், அவற்றின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் வேதனையான விஷயம். இதன் மகத்துவத்தை அறிந்த, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலானவர்கள் மட்டுமே பூவரசு வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்! அவர்களில் ஒருவர்... தஞ்சாவூர் மாவட்டம், புலவன்காடு கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன்.

ஓர் அதிகாலை நேரத்தில், தோட்டம் தேடிச் சென்றபோது, அன்போடு வரவேற்ற மாரியப்பன், ''இப்போ என் தோட்டத்துல 25 பூவரசு மரங்கள் இருக்கு. எல்லாமே, இருபதுல இருந்து இருபத்தஞ்சு வயசுகுள்ளாற உள்ள மரங்கள். ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை நல்லா வளந்த ஒரு மரத்தை வெட்டுவேன். ஆசாரிகளை வெச்சு, கட்டில், பீரோனு செய்து சுத்துவட்டாரத்துல வித்துடுவேன். தேக்கைவிட நல்ல நிறமா இருக்கும்கிறதால பூவரசுக்கு மரியாதை ஜாஸ்தி. இருபது, முப்பது வயசுருக்குற மரத்துல... ரெண்டு பீரோ (ஆறரையடி உயரம், நாலரையடி நீளம் இரண்டடி அகலம்) ஒரு கட்டில் (7 அடி நீளம் 5 அடி அகலம்) செய்யலாம். இந்த மரத்தை வளர்க்கறதும் ரொம்ப சுலபம்தான்'' என்றவர், பூவரசு மரத்தை சாகுபடி செய்யும் முறைகளை விளக்கினார். அவற்றை பாடமாக இங்கே தொகுத்திருக்கிறோம்.

போத்து நடவு !

'பூவரசு, அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. கடும்கோடையில்கூட பசுமையாக இருக்கும். இதை போத்து (குச்சிகள்) மூலமாக நடவு செய்வது சிறந்தது. போத்துகளை, செங்குத்தாக நடவு செய்தால், மரம் வளர்ந்த பிறகு, நிறைய பொந்துகள் உருவாகும். அதனால் படுக்கை முறையில் பதியன் போட்டால், இந்த பிரச்னையைத் தவிர்க்கலாம்.6 அடி நீளம், அரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். இதில் முக்கால் பங்கு மணலையும், காய்ந்த சாணத்தையும் போட்டு, 6 அடி நீளம் கொண்ட பூவரசம் போத்துகளை பதித்து, மண்ணால் மூடி, காற்றுப் போகாமல் மிதித்து, தண்ணீர் தெளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும்.

அடுத்த சில வாரங்களில், ஒரு போத்தில் இருந்து பல துளிர்கள் வெடித்து வந்திருக்கும். போத்தின் இரண்டு ஓரங்களிலும் உள்ள செழிப்பானத் துளிர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை கையால் ஒடித்து விட வேண்டும். அதன் பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது. இப்போது மரத்துக்கு மரம், வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளி இருக்கும். இதுபோல் பதியன் போட்டால்... ஒரு ஏக்கர் நிலத்தில் 600 போத்துகளைப் பதியன் செய்யலாம். மொத்தம் 1,200 மரங்கள் உருவாகும்.

பராமரிப்பு தேவையில்லை !

நடவு செய்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை. ஆண்டுக்கு ஒரு முறை மரங்களை கவாத்து செய்ய வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவையில்லை. 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மரத்தை விட்டு, ஒரு மரத்தை வெட்டி விற்பனை செய்யலாம். இப்படி 600 மரங்களை வெட்டலாம். அடுத்து ஐந்து ஆண்டுகள் (நடவு செய்த 10-ம் ஆண்டில்) கழித்து ஒரு மரம் விட்டு ஒரு மரம் என்ற கணக்கில் 300 மரங்களை வெட்டலாம். அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து (நடவு செய்த 15-ம் ஆண்டில்) மீதி மரங்கள் நன்கு பெருத்திருக்கும் அப்போது அவற்றை வெட்டலாம்.'

நிறைவாக வருமானம் பற்றி விவரித்த மாரியப்பன், ''அஞ்சாம் வருஷம் வெட்டுறப்போ ஒரு மரத்துக்கு ஆயிரம் ரூபாய் விலை கிடைக்கும். 600 மரங்கள் மூலமா 6 லட்ச ரூபாயும்; பத்தாம் வருஷம் வெட்டுறப்போ, மரத்துக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம், 300 மரங்களுக்கு 9 லட்ச ரூபாயும்; 15-ம் வருஷத்துல மிச்சமிருக்குற 300 மரங்கள் மூலமா மரம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் 15 லட்ச ரூபாயும் வருமானமா கிடைக்கும். மொத்தத்துல 15 வருஷத்துல 30 லட்சம் ரூபாய் வருமானம் பார்த்துட முடியும். 

மதிப்புக்கூட்டினால் அதிக லாபம் !

மரமா விக்காம... நாமளே கட்டில், பீரோனு செஞ்சு விக்கிறப்போ கூடுதல் லாபம் கிடைக்கும். சாதாரணமா ஒரு பீரோ 30 ஆயிரம் ரூபாய்க்கும், கட்டில் 12 ஆயிரம் ரூபாய்க்கும் விலை போகும். 20, 25 வருஷ மரத்துல ரெண்டு பீரோ, ஒரு கட்டில் செய்யலாம். இதன்படி பாக்கும்போது ஒரு மரத்துல இருந்தே,72 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதுல, வெட்டுக் கூலி, அறுப்புக் கூலி, இழைப்புக் கூலி, ஆசாரிக் கூலி, தாழ்ப்பாள் மாதிரியான உதிரி சாமான்கள் எல்லாம் சேர்த்து 28 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவானாலும், ஒரு மரத்துல இருந்து 44 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்.

மரத்தை அறுத்து துண்டு போட்டு, இழைச்சும் விக்கலாம். இருபதுல இருந்து முப்பது வயசுள்ள மரத்துல சராசரியாக 25 கன அடிக்கு மரத்துண்டுகள் கிடைக்கும். ஒரு கன அடிக்கு சராசரியா 1,200 ரூபாய் விலை கிடைக்குது. ஒரு மரத்துல இருந்து செலவெல்லாம் போக, 22 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும்'' என்ற மாரியப்பன் நிறைவாக,

வீழ்ந்தாலும் வளரும் !

''இந்த மரம் புயல் அடிச்சாகூட கீழே சாயாது. ஒருவேளை கீழே சாஞ்சாலும் நிமித்திவிட்டா... திரும்பவும் வேகமா தழைச்சுடும். நிமிர்த்தி வைக்காவிட்டாலும் கூட, சாய்வாகவே வளரும். இதுவே தேக்கு மரமா இருந்தா, புயல்ல கீழ சாஞ்சுட்டா மறுபடியும் பிழைக்காது. ஒவ்வொரு வருஷமும் கவாத்து பண்ற கிளைகளை போத்தாவும் வித்துடலாம். அதுவும் நல்லா விற்பனையாகுது. பதியன் போடுறதுக்கும் வாங்கிக்கறாங்க.விவசாயிங்க மனசு வெச்சாங்கனா... அதிகளவு பிராண வாயுவை உற்பத்தி பண்ற பூவரசு மரங்களை நடவு செஞ்சு சுற்றுப்புறத்தையும் சுத்தமாக்கி, தங்களையும் வளமாக்கிக்க முடியும்'' என்றார், சந்தோஷமாக! 

தொடர்புக்குமாரியப்பன், செல்போன்: 97881-88463.

**************

தென்னைக்கு அருகில் நடும்போது கவனம் ! 

தஞ்சாவூர் மாவட்டம், ஒதியடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வேதையனும் அதிக எண்ணிக்கையில் பூவரசு மரங்களை வளர்த்து வருகிறார்.

தன்னுடைய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்த வேதையன், ''எனக்கு 10 ஏக்கர்ல தென்னந்தோப்பு இருக்கு. 15 வருசத் துக்கு முன்ன தோப்புல வேலி ஓரத்துலயெல்லாம் நாலடி இடைவெளியில ஐநூறு பூவரசு போத்துகளை செங்குத்தா நடவு செஞ்சேன். அதுல நானூறு மரங்கள் நல்லா வளந்துருந்துச்சு. பத்து வருஷம் கழிச்சு நூறு மரங்களை மட்டும் வெட்டி ஒரு மரம் 3 ஆயிரம் ரூபாய்னு வித்தேன்.

ஒரு சில இடங்கள்ல தென்னை மரத்துல இருந்து நாலடி தூரத்துலயே பூவரசு மரம் இருந்தது. அந்த இடத்துல எல்லாம், தென்னையில சரியா காய் காய்க்கல. அதனால, தென்னைக்குப் பக்கத்துல நடும்போது கவனமா இருக்கணும். குறைஞ்சது பத்தடிக்கு மேல இடைவெளி விடணும்'' என்கிறார், வேதையன். யூரியாவுக்கு மாற்று பூவரசு இலைகள் !

பூவரசின் இலைகளையே அடியுரமாகப் பயன்படுத்தி வருகிறார் மாரியப்பன். அதைப் பற்றிப் பேசியவர்,

''ஒரு மரத்துல இருந்து வருசத்துக்கு குறைஞ்சபட்சம் 500 கிலோ இலை கிடைக்கும். இந்த இலைகள் ரொம்ப அருமையான உரம். இதுல தழைச்சத்து நிறைய இருக்கு. யூரியாவுக்கு பதிலா பூவரசு இலைகளத்தான் மூணு ஏக்கருக்கு அடியுரமா பயன்படுத்தி நெல் சாகுபடி பண்றேன். பசுமையான இலைகளை வயல்ல பரப்பி தண்ணீர் கட்டிட்டா, ரெண்டு மூணு நாள்ல மட்கி உரமாகிடும். பொதுவாவே, பூவரசு மரத்தடியில எப்பவுமே ஈரம் இருக்கும். அதுல சருகெல்லாம் விழுறதால தானாவே மண்புழுக்கள் வர ஆரம்பிச்சுடும். அதனால அந்த இடத்துலேயே பூவரசு சருகுகளை வெச்சு மண்புழு உரமும் தயாரிச்சுக்குறேன்'' என்று புதிய தொழில்நுட்பம் சொன்னார்.