Monday, September 26, 2011

இலவச மரக்கன்று வழங்கும் வனவியல் மையம்

சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள், அதை வைத்து பராமரிக்க முறையான பயிற்சி மற்றும் கன்றுக்கு ஊக்கத்தொகை என பல வகைகளில் விவசாயிகளின் வாழ்க்கையை வனவியல் விரிவாக்க மையம் வளமாக்கி வருகிறது.
  • தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் வனவியல் விரிவாக்க மையம் இயங்கி வருகிறது. திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் பூண்டியில் திருவள்ளூர் மாவட்ட வனவியல் விரிவாக்க மையம் 3.10 ஹெக்டேர் பரப்பளவில் இயங்கி வருகிறது. இங்கு தேக்கு, சவுக்கு, குமிழ், மகானி, வேங்கை, செம்மரம், மூங்கில், சவுக்கு உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குகிறது.
  • குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்துள்ள விவசாயிகள் நிலத்துக்கு உரிய ஆவணங்களும், ரேஷன்கார்டு ஆகியவற்றுடன் வனவிரிவாக்க மையத்தை அணுகினால் வனவிரிவாக்க மைய அலுவலர்கள் விவசாயிகளின் இடத்துக்கே நேரில் சென்று ஆய்வு செய்து அந்த மண்ணின் வளத்துக்கேற்றவாறு மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவர். ஒரு ஏக்கருக்கு 2000 கன்றுகள் வரை வழங்கி அதை முறையாக பராமரிக்கும் பயிற்சி, மண் புழு உரம் மற்றும் தேவையான வழிமுறைகளையும் விவசாயிகளுக்கு எடுத்து கூறி வளம் பெறச் செய்கின்றனர்.
ஊக்கத்தொகை:

தங்களது வயலில் பயிரிட்டிருந்தாலும் அதன் வரப்பு ஓரங்களில் மரக்கன்றுகளை வரிசையாக நட்டு அதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வளம் பெற வழிகாட்டுகின்றனர். நாளடைவில் வனவியல் விரிவாக்க மைய அலுவலர்களின் வழிகாட்டுதலை முறையாக பின்பற்றி மரக்கன்றுகளை முறையாக பராமரிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு கன்றுக்கு ரூ.5 வழங்குகின்றனர்.
தேக்கு 20 ஆண்டுகள், மகானி 20 ஆண்டுகள், வேங்கை 20 ஆண்டுகள், குமிழ் 7 ஆண்டுகள், மூங்கில் 3 ஆண்டுகள், சவுக்கு 4 ஆண்டுகள் என பருவத்துக்கு ஏற்றவாறு மரங்கள் விவசாயிகளுக்கு பெருத்த லாபத்தை ஏற்படுத்தி தருகின்றன.


மரக்கன்று விநியோகம்:

இது குறித்து பூண்டியில் உள்ள வனவியல் விரிவாக்க மைய அலுவலர் சிவலிங்கம் கூறும்போது, “3.10 ஏக்கரில் இங்கு தேக்கு, வேங்கை, குமிழ், மகானி உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை வளர்த்து அதை உரிய பருவத்தில், நாடி வரும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். கடந்த 2009-ம் ஆண்டு இம்மாவட்டத்தில் 60 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.

வனவியல் விரிவாக்க மையம் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு முழு அளவில் ஏற்படாததால் தற்போது கிராமப்புறங்களில் சென்று பயிற்சி கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். 2011-ம் ஆண்டில் 2 லட்சம் மரக்கன்றுகளை இம்மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயித்து அதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறோம்’ என்றார். விவசாயிகள் மேலும் விவரங்களுக்கு 9994347739 என்ற எண்ணில் வன விரிவாக்க மைய அலுவலர் சிவலிங்கத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

                                                                                     தினமணி தகவல்

கை கொடுக்கும் காடுகள்!


காடுகள் மனிதகுலத்துக்குப் பெரும் நன்மை பயக்கின்றன. அவை நமக்கு மரம், பிசின்கள் போன்ற பல பொருட் களைத் தருகின்றன. காட்டு மரங்களில் இருந்தே நாம் காகிதங் களையும், செயற்கைப் பட்டுகளையும் உருவாக்குகிறோம்.
ஒரு காலகட்டத்தில் மனிதன் காடுகளை பெருமளவில் நாசப்படுத்தியதோடு, அழித்தும் வந்தான். காடுகள் அவ்வாறு அழிக்கப்பட்டதால் மரங்களும், பிற பயனுக்குரிய பொருட்களும் கிடைக்காமல் போயின. அதுமட்டுமல்ல, தட்பவெப்பநிலை மாறியதோடு, காடுகள் மறைந்த இடங்களில் எல்லாம் பாலைவனங்கள் தோன்றலாயின. அதன் பின்பே காடுகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பரவலாயிற்று.
காடுகள், நீர் வளத்தைப் பாதுகாக்கின்றன. மலைகளில் உள்ள அடர்ந்த காடுகளில் மழை பெய்யும்போது, மரங்களின் இலை களால் அதன் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு நீர் விழுகிறது. எனவே அங்குள்ள வளமான மண் கரைந்து போவதில்லை. அப்படியும் அரித்துச் செல்லும் மண்ணை மலைச் சரிவில் உள்ள மர வேர்கள் தடுத்து விடுகின்றன.
மலைகளில் மரங்களே இல்லாதிருந்தால் மழை வேகமாகப் பெய்து, அங்குள்ள வளமான மண்ணை அடித்துக்கொண்டு போய்விடுகிறது. குளிர்காலங்களில் மலையில் பெய்து உறையும் பனி, வெறுந்தரையில் விரைவில் உருகிவிடும். ஆனால் காடுகளில் பெய்யும் பனி மெதுவாகவே உருகும். மேலும் அந்த நீர், நிலங்களுக்கும், பண்ணைகளுக்கும், ஊற்றுகளுக்கும், பூமியின் அடியில் உள்ள ஓடைகளுக்கும் மெதுவாகச் சென்று பரவுகிறது.
வேகமான வெள்ளப் பெருக்கு, மரங்களை வீழ்த்தி விடுகிறது. வெற்றிடத்தில் விழும் மழை நீரும், உருகும் பனி நீரும் மெதுவாகச் செல்வதற்குப் பதிலாக துரித கதியில் ஓடி மறைந்து விடுகிறது.
வண்டல் மண்ணை வாய்க்கால், ஆறுகள், கடல் ஆகியவற்றுக்கு மழை நீர் இழுத்துச் செல்வதை காடுகள் தடுக்கின்றன. மரங்களின் வேர்களும், கிளைகளும், வண்டல் மண் அரித்துச் செல்லப்படாமல் தடுத்து விடுகின்றன.
காடுகள் அழிக்கப்பட்டு மொட்டையாகும் மலைகளில் இருந்து அடித்துச் செல்லப்படும் வண்டல், துறைமுகங்கள், நதிக் கால்வாய்கள் ஆகியவற்றில் படிகிறது. அந்த வண்டல் மண்ணை அகற்றி, ஆழப்படுத்த உலகெங்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அதே நேரம் வண்டல் அரிக்கப்படும் நிலம் தனது வளத்தை இழப்பதால், விவசாயம் கேள்விக்குறியாகிறது.
மனிதன் தனது சுயநலத்தால் எப்படித் தனக்குத் தானே தீங்கு செய்துகொள்கிறான் என்பது இதிலிருந்து புரியும்.

Friday, September 16, 2011

அரசமரம் மர‌த்‌தி‌ன் சிறப்பு!

புவியில் வாழும் உயிர்களுக்கு உயிர் கொடுப்பது மரங்கள்தான்.
மரங்கள்தான் சூரிய ஒளியிலிருந்து வெப்பத்தை உள்வாங்கி, குளோரோபில் மூலம் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.
இதனாலேயே தாம் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அப்படி நம் முன்னோர்கள் வழிபட்ட மரங்களுள் அரச மரமும் ஒன்று.இன்று குளக்கரை, கோவில்களில் அரச மரம் இல்லாத கிராமங்களை நாம் காண முடியாது. நீண்ட காலம் வாழும் அரச மரங்கள் தெய்வமாக போற்றப்படுகின்றன. வேம்பை பெண் தெய்வமாக வணங்குவார்கள். அரச மரத்தை ஆண்தெய்வமாக வணங்குவர். பெரும்பாலும் அரச மரம் இருக்கும் இடமெல்லாம் பிள்ளையார் சிலை இருக்கும்.

புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான்.அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் என்ற பழமொழி உண்டு.இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப்பேறை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே.அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.
புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் பாரத பூமிதான்.

நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.
நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர்.

இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மை கொடுப்பதுடன் சுரக்காய்ச்சல் குறையும். முக்குற்றத்தையும் அதாவது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சீராக்கி உடலை சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
அரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.

அரசமரப் பட்டையை சிதைத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். உடல் வெட்கை குறையும். வியர்வை நாற்றம் நீங்கும். சருமம் பளபளப்பதுடன், சரும நோய்கள் அண்டாது. சருமத்தில் சுருக்கம் ஏற்படாது.

அரசமரப் பட்டையை சிதைத்து பொடியாக்கி நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.
அரச மரப் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள புண்கள் விரைவில் குணமாகும்.

வெள்ளைப்படுதல் நோய் கொண்ட பெண்கள் இந்த நீரால் பிறப்புறுப்பை கழுவி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் குறையும்.
அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
அரச மரத்தின் பாலை எடுத்து பாத வெடிப்புகள் உள்ள பகுதிகளில் பூசிவந்தால் பித்த வெடிப்புகள் விரைவில் மறையும்.
அரச இலை, பட்டை, வேர் இவைகளை எடுத்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேவையான அளவு பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால், மன அழுத்தம், மன எரிச்சல், அதீத கோபம், தீரா சிந்தனை போன்றவை தீரும்.
அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் அரச மரமும் ஒன்று. எனவே அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

Friday, September 9, 2011

நாவல் மர‌த்‌தி‌ன் சிறப்பு!

நாவல் மரம் எல்லா வகையிலும் ஒரு சிறப்பான மரம். நாவல் மரம் என்று எடுத்துக்கொண்டால், திருநாவலூர் என்று ஒரு ஊர் இருக்கிறது, திருச்சி பக்கத்தில் திருவானைக்காவல் என்று ஒரு ஊர் இருக்கிறது. இங்கெல்லாம் நாவல்தான் தலவிருட்சமாக இருக்கிறது.

பொதுவாக நாவல் மரங்களை வளர்த்தால் நல்லது. ஆனா‌ல் வீட்டில் வளர்ப்பது அவ்வளவு விசேஷம் கிடையாது. நிலங்களில் வைத்து வளர்க்கலாம். நாவல் மரங்களைத் தேடி கரு வண்டுகள் அதிகமாக வரும். கரு நாகங்களும் நாவல் மரத்தில் வந்து குடி கொள்ளும். அந்த மரத்திலிருந்து வெளிப்படக்கூடிய வைப்ரேஷன், அதனுடைய காற்‌றி‌ன் கு‌ளி‌ர்‌ச்‌சி போன்றவை இவைகளை ஈர்க்கும். அதனால் இதனை வீடுகளில் வளர்க்காமல், விளை நிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் வளர்த்தால் நல்லது. அந்தக் காற்று உடலிற்கும் நல்லது, மகிழ்ச்சியும் தரக்கூடியது.
நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் உடம்பிற்கு குளிர்ச்சி தரும். மேலும் சிறுநீரகப் பாதையில் உள்ள தொற்றுகளை விரட்டும், நீர்க்கடுப்பு பிரச்சனையையும் தீர்க்கும். சிறுநீரகத் தொற்றையும் போக்கும், சிறுநீர்க் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் போன்றவற்றையும் போக்கும் தன்மை நாவல் பழத்திற்கு இருக்கிறது. இதுதவிர, நாவல் பழத்தில் புரோட்டின், நார்சத்து, விட்டமின் சி, டி போன்றவையும் இருக்கிறது. தற்போது பல ஊர்களில் நாவல் மரம் இல்லை. மக்களுக்குத் தெரியாத இடங்களில் மட்டும் இருக்கிறது.
நாவல் பழம் நீரிழவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதியை எல்லா வகையிலும் தீர்க்கக் கூடியது. விநாயகருக்கும் நாவல் பழம் மிகவும் விசேஷமானதாக இருக்கிறது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று நாவல் பழம் வைத்து, வழிபட்டால் நல்லது என்று சொல்வார்கள்.
நாவல் மரத்திற்கென்று பெரிய மருத்துவ குணங்கள் உண்டு. நாவல் பட்டை சாறு எல்லா வகையிலும் நல்லதைக் கொடுக்கும். நாவல் இலையை பொடி செய்து சாப்பிட்டால் பேதி நிற்கும். இந்தப் பொடியால் பல் தேய்த்தால் பல் ஈறுகள் வலுவடையும். நாவல் இலையின் சாம்பல் நாள்பட்ட தீக்காயங்கள், வெட்டுக் காயங்களை குணப்படுத்தும்.