Sunday, August 7, 2011

"மரம் நடுதல்"

மரம் செடிகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும், ஒரு இயற்கையான சூழ்நிலையை நமது இடத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம், அதனால் நம்மால் முடிந்த அளவு நம் வீட்டை சுற்றி உள்ள இடங்களில் மரங்கள் வைக்கவும் , அதே போல மற்றவர்களையும் மரம் வளர்க்க கூறி வலியுறுத்தியும் வருவோம்.

தற்போது மரம் நடுவது என்பது அரசியல்வாதிகள் பொதுநலவாதிகள் ஆன்மீகவாதிகள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் செய்யும் காரியம் என்றாகி விட்டது.
முதலில் மரம் நடுகிறார்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுகிறார்கள் பின்னர் அவர்களது வேலை மரம் வைப்பதோடு முடிந்தது பராமரிப்பது கிடையாது. இதில் தனியார், அரசு, ஆன்மிகம் என்று எவரும் பாகுபாடு இல்லை. இவ்வாறு ஆயிரக்கணக்கில் செடிகளை வைத்து அவற்றை கருக செய்வதற்கு இவர்கள் எதற்கு நடனும்.

இதில் ஒரு சிறு ஆறுதல் அப்படியும் தப்பி தவறி ஒரு சில செடிகள் தப்பி பிழைத்து விடுகின்றன.பொதுவாக அரசாங்கம் செடிகளை வைத்தாலும், அதை ஒரு சில இடங்களிலேயே சரியாக பராமரிக்கிறார்கள், பெரும்பான்மையான இடங்களில் அங்கே செடி வைத்ததற்கான அடையாளமே இருக்காது (அந்த கூண்டு மட்டும் காணலாம்).

சரி நமது அரசாங்கங்கள் தான் அப்படி செய்ய பழகி விட்டது, இதில் கவலை பட என்ன இருக்கிறது! என்று நம்மை சமாதான படுத்திக்கொண்டாலும், மற்றவர்களும் இதை போல தான் நடந்து கொள்கிறார்கள் என்பதை தவிர்க்கவேண்டும்.

வருடாவருடம் பலர் மரம் நடுவதாக அறிவிப்பு செய்து விளம்பரப்படுத்தி பெரிய அளவில் செய்வார்கள். அதே போல் செடி நட்டாலும் பாதுகாப்பு இன்றி செடி பட்டுபோய் விடுகிறது. அதற்க்கு பாதுகாப்பாக வைத்த குச்சிகள் தளைத்து!! பின் தண்ணீர் விடாததால் பின் அதுவும் வறண்டு போய் விடுகிறது,. இதை போல மரம் நடுகிறேன் செடி வளர்க்கிறேன் என்று விளம்பரத்திற்காக வெட்டி வேலை செய்வதை தவிர்த்து,வைத்த செடியை பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டுகிறோம் .

மரம் நடுவது என்பது மிகச்சிறந்த செயல் அதில் எந்த சந்தேகமுமில்லை, தற்போது பூமியில் வெப்பத்தின் அளவு அதிகரித்து வரும் வேளையில் இயற்கையின் அருமையை இன்னும் உணராமல் இருப்பது தான் தவறு.

ஆனால் இதை போல விளம்பரத்திற்காக லட்சம் செடிகளை நடுகிறேன் என்று உருப்படியாக 100 செடி கூட நல்ல முறையில் வளர்க்காமல் இருப்பதற்கு எதற்கு அத்தனை செடிகள் நடவேண்டும்? செடியை நட்டால் மட்டும் போதுமா! அதை பராமரிக்க வேண்டாமா! எத்தனை செடிகளை நடுகிறோம் என்பது முக்கியமல்ல அதில் எத்தனை செடியை நன்றாக வளர்த்தோம் என்பதே கேள்வி! . ஆசை இருந்தால் மட்டும் போதுமா! அதை அடைவதற்க்குண்டான சரியான முயற்சியில் இறங்க வேண்டாமா! இவர்களை போன்ற அமைப்புகள் 100 செடிகளை நட்டாலும் அதை சரியான முறையில் பாதுகாத்து வளர்த்தாலே மிகப்பெரிய சமுதாய தொண்டு.
இது வரை இதை போல லட்ச கணக்கில் நட்டதற்கு இந்நேரம் தமிழகம் அமேசான் காடு மாதிரி ஆகி இருக்க வேண்டும்!! இதில் அதிக அளவில் மரம் நட்டு கின்னஸ் சாதனைக்கு கூட முயற்சித்தார்கள் என்று நினைக்கிறேன், இதை போல விளம்பரங்களே இவர்களுக்கு முக்கிய நோக்கமாக உள்ளது மரம் வளர்ப்பதில் இல்லை. இவர்கள் செய்யும் இந்த செயலில் ஒரு சில செடிகள் எப்படியாவது தம் கட்டி உயிர் பிழைத்து விடுவது மனதிற்கு ஆறுதலும் சந்தோஷமும் அளிக்கும் செய்தி.

இயற்கையின் மகத்துவத்தை உணராதவரை நமது பகுதி முன்னேற வாய்ப்பில்லை. இதன் அருமை உணராமல் எப்படி தான் வறட்டு மனம் கொண்டவர்களாக சி(ப)லர் இருக்கிறார்களோ! மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!


1 comment:

Punith ravi said...

சிறந்த கருத்துக்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் . இதை அனைவரும் படிக்க வேண்டும்...வாழ்க உம் சேவை.