Sunday, August 28, 2011

வறட்சியிலும் வளம் தரும் சந்தனம், மலைவேம்பு

சந்தன மரங்களை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திரமாக வளர்க்க அரசின் அனுமதி உண்டு. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்திட மாவட்ட வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அறுவடை செய்த சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் நடத்தும் ஏலத்தின் மூலம் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். தனியாருக்கும் விற்பனை செய்யலாம். 20% தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். எனவே விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிறுவனங்களும் ஆர்வமுடன் சந்தன மரங்களை வளர்க்க முன்வந்துள்ளனர்.

சந்தன மரங்கள் வேலிகளிலும் தரிசு நிலங்களிலும் இயற்கையாகவே வளர்ந்து வறட்சியிலும் பசுமையாக காட்சிதரும் அழகிய தெய்வீக மரமாகும். இந்தியாவின் அனைத்து நிலப்பகுதிகளிலும் அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் வளம் குன்றிய பாறை நிலங்களிலும் செழிப்புடன் வளரும் தன்மை கொண்டது. சந்தன மரங்களை வீடுகளிலும் பூங்காக்களிலும் விவசாய நிலங்களிலும் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை, கோயில் வளாகங்களிலும் வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்பாடு அடைவதுடன் 12 ஆண்டுகளுக்குப் பின் பலகோடி ரூபாய் அன்னியச் செலாவணியை ஈட்ட முடியும்.

ஒரு கிலோ சந்தன மரக்கட்டை 6000 ரூபாய் வரை வனத்துறையினர் நடத்தும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 15 ஆண்டுகள் வளர்ந்த ஒரு சந்தன மரத்தின் மூலம் 30 ஆயிரத்திற்கு மேல் வருமானம் கிடைக்கும். ஊடுபயிராக வளர்க்கப்படும் மரங்களின் மூலம் தனி வருமானம் பெறலாம்.


மலைவேம்பு

மலைப்பகுதிகளில் நீரோட்டம் இருக்கும் இடங்களில் மட்டுமே மலைவேம்பு வளர்ந்து நிற்கிறது. எனவே இதற்கு நீர்ப்பாசனம் அவசியம். கன்று நடவு செய்தபிறகு முதல்3 ஆண்டுகளுக்கு வாரம் ஒரு முறை கட்டாயம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். எனவே தண்ணீர் பாசன வசதி இல்லாத இடங்களில் சாகுபடி செய்வதைத் தவிர்க்க வேண்டும். மீறிச்செய்தால் பொருளாதார ரீதியாகப் பலன் கிடைக்காது. அதே சமயம் நீர் தேங்கி நிற்கும் களிமண் நிலத்தில் சாகுபடி செய்தாலும் கன்றுகள் அழுகிவிடும். எனவே வடிகால் வசதியுள்ள நிலமாக இருக்க வேண்டும்.

கன்று நடவு செய்த இரண்டாம் ஆண்டே தீக்குச்சி கம்பெனிகளுக்கு விற்கலாம். மின்சாரம் தயாரிக்க எரிபொருளாகவும் மலைவேம்பு மரங்களைப் பயன்படுத்தலாம். நான்கு ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்த மரங்கள் பிளைவுட் தொழிற்சாலைகளில் இருந்து வந்து வாங்கிக் கொள்கிறார்கள். பூச்சிகள் அரிப்பதில்லை. எனவே வீடுகளில்கூட மரச்சாமான்களுக்காக இம்மரத்தை பயன்படுத்துகிறார்கள்.

No comments: