Wednesday, December 7, 2011

கவலையைப் போக்கும் கடம்பு!



இந்தியாவில் உள்ள தொன்மையான மரங்களில் முக்கியமானது... கடம்பு. இந்தியாவின் ஒற்றுமைக்கே இது ஓர் உதாரணமாகத் திகழ்கிறது என்றுகூட சொல்லலாம். ஆம்... தமிழ், இந்தி, சமஸ்கிருதம் என இந்தியாவில் பேசப்படும் பல்வேறு மொழிகளிலும் 'கடம்பு’ என்றே இது அழைக்கப்படுகிறது.

1977-ம் ஆண்டு இந்திய அரசால், அஞ்சல் தலையில் பொறிக்கப்பட்ட பெருமையுடையது இம்மரம். இதன் பலகையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கட்டிலில் படுத்தால்... அலுப்பு நீங்கி, சுகமான தூக்கம் வரும். அதனால்தான் நம் முன்னோர்கள், 'உடம்பை முறித்து கடம்பில் போடு’ என்று ஒரு சொலவடையைச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

பறவைகளுக்கு பழங்களுக்காகவும், மனிதர்களுக்கு மருந்துக்காகவும் பயன்படுவதோடு, காகிதம், பென்சில், தீப்பெட்டி, தீக்குச்சி எனப் பல வகையான பொருட்களுக்கு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது, கடம்பு. பெரும்பாலும், ஆற்றோரங்களில் இந்த மரங்களை அதிகளவில் நட்டு வைத்தனர் நம் முன்னோர்கள்.

இந்தியாவில் இயற்கையாக வளரும் இந்த மரம், கோஸ்டாரிகா, தென்னாப்பிரிக்கா, சுரினாம், தைவான், வெனிசுலா ஆகிய நாடுகளில் தோட்டப் பயிராகவும் வளர்க்கப்படுகிறது.

இனி, கடம்ப மரத்தை வளர்க்கும் முறைகளைப் பற்றி பார்ப்போமா..?

நீர்நிலைகளை ஒட்டி வளர்க்கலாம்!

கடல் மட்டத்தில் இருந்து 300 முதல் 800 மீட்டர் உயரத்தில் 1,600 மில்லி மீட்டர் மழையளவு உள்ள பகுதிகளில் இம்மரம் நன்றாக வளரும். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் நிலங்களிலும் வளரும். மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரங்களில் உள்ள நிலங்கள், கடற்கரைப் பகுதிகள் கடம்ப மரம் வளர்க்க ஏற்ற பகுதிகள். கிராமங்களில், ஏரிகளின் கரையை ஒட்டிய நிலங்களிலும், ஆற்றோரங்களிலும் இதை வளர்க்கலாம். ஆனால், வளமில்லாத, மண்ணில் காற்றோட்டம் இல்லாத நிலங்களில் இது வளராது.

ஏக்கருக்கு 400 கன்றுகள்!

கடம்ப மரக் கன்றுகளை 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் குழியெடுத்து நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 200 செடிகள் வரை தேவைப்படும். பென்சில் தயாரிப்புக்காக நடுவதாக இருந்தால்... 10 அடி இடைவெளியே போதுமானது. இப்படி நடவு செய்யும் போது, ஏக்கருக்கு 445 கன்றுகள் வரை தேவைப்படும். முதல் ஆண்டில் வளர்ச்சி மெதுவாகத்தான் இருக்கும். இரண்டாம் ஆண்டில் இருந்து வளர்ச்சி துரிதமாகும். 8-ம் ஆண்டுக்கு மேல் வளர்ச்சி வேகம் மட்டுப்படும்.

எட்டு முதல் பதினைந்து ஆண்டுகளில் தேவைக்கேற்ற வளர்ச்சி பெற்று விடும். அதன் பிறகு மரங்களை வெட்டலாம். வெட்டிய பிறகு வேகமாக துளிர்க்கும் என்பதால், தோட்டப் பகுதியில் சீரற்ற வளர்ச்சி கொண்ட மரங்களை தரையை ஒட்டி ஒரே வீச்சில் வெட்டுவதன் மூலம் சீரான, நேரான துரித வளர்ச்சி கொண்ட மறு துளிர்ப்பை உருவாக்கலாம். கடம்பின் இந்த குணத்தால், தொடர்ந்து மறுதாம்பு மூலம் மகசூல் எடுக்கலாம்.

10 ஆண்டு வயதுள்ள மரத்தில் இருந்து, குறைந்தபட்சம் 10 கன அடி மரம் கிடைக்க வாய்ப்புள்ளது. பென்சில் தொழிற்சாலைக்கு விற்பனை செய்யும் போது, கன அடிக்கு

250 ரூபாய் என வைத்துக் கொண்டால்கூட ஒரு மரத்துக்கு சுமார் 2,500 ரூபாய் விலை கிடைக்கும். இதன்படி ஒரு ஏக்கரில் உள்ள 400 மரங்கள் மூலமாக 10 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கடம்ப மரத்தில் வைரப் பகுதியெல்லாம் கிடையாது. மொத்த மரமும் மஞ்சள் சாயல் கொண்ட, வெண்மை நிறத்தில் இருக்கும். இதில் அறுவை வேலைகள் செய்வது எளிதாக இருக்கும். அறுக்கப்பட்ட மரங்கள் சீரான மேற்பரப்பைக் கொண்டதாகவும், துளையிட எளிதாகவும் உள்ளதால், பென்சில் தயாரிப்புக்கு ஏற்ற மரமாக உள்ளது.

இதன் காரணமாகவே... நடராஜ் பென்சில் நிறுவனத்தினர் கோயம்புத்தூர் அருகே 200 ஏக்கரில் கடம்ப மரத்தை சாகுபடி செய்கிறார்கள். அங்கு விளையும் மரங்களைக் கொண்டு பல்லடத்தில் உள்ள அவர்களது தொழிற்சாலையில் பென்சில் தயாரிக்கிறார்கள்.

தேவை அதிகமாக இருப்பதால், கடம்ப மரத்துக்கான மவுசு கூடிக் கொண்டேதான் இருக்கிறது. இதை வைத்து, லாபத்தை அறுவடை செய்வது உங்கள் கைகளில் இருக்கிறது!

நோய்க்கு மருந்தாகும் கடம்பு!

கடம்பின் இலைகள், கால்நடைகளுக்குத் தீவனமாக பயன்படுகின்றன. இதன் இலை மற்றும் பட்டைகளில் இருந்து காடமைன், ஐசோகாடமைன், கடம்பைன் போன்ற அல்கலாய்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இவை மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கான மருந்து மற்றும் விஷ முறிவு மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் குளோரோஜெனிக் அமிலத்தில் ஈரல் பாதுகாப்புக்கான மருந்து இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் இலை... வாய் மற்றும் தொண்டைப் புண்ணுக்கு மருந்தாகவும்; பழங்கள்... வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் காய்ச்சலுக்கு மருந்தாகவும்; விதைகள்... விஷக்கடி, நீர்க்கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகவும்; பட்டை... உடல் பலவீனம், சூடு நோய், தசைப் பிடிப்பு, கண் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன.

வேர், பட்டையில் இருந்து இயற்கைச் சாயம்; பூக்களைக் காய்ச்சி எடுக்கும் தைலத்தில் இருந்து வாசனைத் திரவியம் என பல பயன்பாடுகள் உள்ளன. இம்மரத்தின் பூக்கள் ஆரஞ்சு வண்ணத்தில் பூத்து அதிக நறுமணம் வீசுவதால்... தேனீக்களால் அதிகளவில் கவரப்படுகின்றன. அதனால், தேனி வளர்ப்புக்கு உதவுவதோடு மற்றப் பயிர்களின் மகசூலும் கூடுகிறது. இம்மரம் அதிக அளவில் இலைகளை மண்ணில் கொட்டுவதால், அங்கக கரிம வளத்தைக் கூட்ட உதவுகிறது.

பிரசுரம் காப்புரிமை
இரா.ராஜசேகரன் வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்.



7 comments:

Unknown said...

I want this plant.

Unknown said...

உடனடி தேவையாக 200 நீர்கடம்பு நடவுக்குகந்த கன்றுகள் கிடைக்கும் விலாசங்கள் தெரிவிக்கவும்

Unknown said...

கடம்பு மரத்தின் நாற்று முதல் மரம் வரையிலான படங்களை காண்பிக்கவும்

Unknown said...

Supar

Anonymous said...

It's available in Isha nursery

Anonymous said...

50 கன்றுகள் தேவை

Anonymous said...

50 கன்றுகள் வேண்டும்