பராமரிப்புக்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஆடு, மாடு சாப்பிடாது... பூச்சி, நோய் தாக்குதலால் பாதிப்பு இருக்காது... முறையாக பாசனம் மட்டும் கொடுத்தால் போதும்! 6 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்துவிட்டால், தேக்கு மரம் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும்.
கப்பல், படகு, மரச் சாமான்கள், கதவு, ஜன்னல் மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுவதால், சர்வதேச அளவில் பெரும் தேவை இருக்கிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இது நன்றாக வளரும்.
ஆடி மாதத்திலிருந்து கார்த்திகை மாதம் வரை நடுவது சிறந்த காலமாகும். மழைக்காலமாக இருப்பதால் நன்கு வளரும். பின்பு வெய்யில் காலத்தில் 10-15 நாட்களுக்கு ஒரு தண்ணீர் பாய்ச்சினால்கூடப் போதுமானது.
தேக்குச் சாகுபடியில் தேக்கு விதையை மேட்டுப் பாத்தி அமைத்து அதில் விதையைத் தெளித்து தினமும் 2 முறை தண்ணீர் தெளித்து வளர்க்க வேண்டும். 8 மாதம் வளர்ந்த பின்புதான் அதை வேருடன் பிடுங்கி மேல் வெட்டிவிட்டு அடிப்பகுதியை (வேர்ப்பகுதி) தேக்கு மரம் பயிர் செய்யும் பூமியில் நடவேண்டும். இதைத்தான் தேக்கு பதியங்கள் என்று சொல்லுகிறோம்.இந்தத் தேக்கு நாற்றுப் பதியங்களை நேரடியாக பூமியில் நடலாம். அல்லது அதையே பாலிதீன் பையில் போட்டு வளர்த்த பின்பும் நடலாம்.
தேக்கு, நல்லவடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல் மண் மற்றும் மணற்பாங்கான செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். நிலத்தை நன்றாக உழவு செய்து கொள்ள வேண்டும். மழைக் காலத்துக்கு முன்பாக 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் இரண்டு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகத்துக்கு மட்கிய தொழுவுரத்துடன் வண்டல் மண்ணைக் கலந்து இட்டு, மீதமுள்ள குழியை மேல் மண்ணைக் கொண்டு நிரப்ப வேண்டும்.மூன்று மாதம் வரை, வாரம் ஒரு முறையும், அதன் பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும் நீர்ப்பாய்ச்சுவது நல்லது. சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தால், நல்ல மகசூல் கிடைக்கும்.
தேக்கு மரங்கள் தரமானதாகவும், பக்கக் கிளைகள் இல்லாததாகவும் வளர்ந்தால்தான் அதிக வருமானம் கிடைக்கும்.குறைபாடு இல்லாத, வளைவுகள் இல்லாத ஒரே நேர்க்கோட்டுல வளர்ந்திருக்கற மரங்களுக்குத்தான் மவுசு அதிகம். அப்படி வளர்க்கறதுக்கு அடிப் படையான சில விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சிக் கணும். தென்னந்தோப்புல தேக்கு போட்டா தென்னைக்கும் தேக்குக்கும் நடுவுல 10 அடி இடைவெளி இருக்கணும். ரெண்டு தேக்குக்கு நடுவுல 15 அடி இடைவெளி அவசியம். பக்கக்கிளைகளை தரைமட்டத்திலிருந்து மரத்தின் உயரத்தில் மூன்றில் இரு பங்கு உயரத்தில் மட்டுமே கழிக்க வேண்டும்.தேக்கு மரம் 100 - 120 ஆண்டுகள் உயிர்வாளும்.
ஒரு ஏக்கரில் 250 தேக்கு மரங்களை வளர்த்தெடுத்தால், 20 அல்லது 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மரம் 30,000ல் லிருந்து 40,000 ரூபாய் விற்கும், இது தற்போதைய விலைதான் 20 ஆண்டுக்குப்பின் அதிகமாக இருக்கும். இது செம்மண் பூமிக்குத்தான் மற்ற இடங்களில் குறைவாகத்தான் கிடைக்கும்.
குறிப்பு : தேக்குமரம் ஒரு வரிசையாகவும் வேறுவகை மரம் ஒரு வரிசையாகவும் (செஞ்சந்தனம், மகோகனி, வேங்கை, கயா,சிசு, மாஞ்சியம்) அமைத்தால் இரண்டும் நன்றகவளரும்.
No comments:
Post a Comment