Wednesday, November 30, 2011

தரிசு நிலத்திலும் வருமானம் கொடுக்கும் வேம்பு...

தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் வளரக்கூடிய மரம் வேம்பு. தெய்வமாக மதித்து மக்கள் வழிபடும் பெருமை வேம்புக்கு மட்டுமே உண்டு. காற்றிலுள்ள நச்சுகளை உறிஞ்சிக் கொள்வதோடு, மனிதர்கள், விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களையும் தீர்க்கும் வல்லமை படைத்தவை வேப்ப மரங்கள். வீடுகளுக்குத் தேவையான நிலை, கதவு, ஜன்னல் போன்றவற்றுக்கும் இம்மரம் பயன்படுவதால் இதை 'ஏழைகளின் தேக்கு’ என்றும் அழைக்கிறார்கள்.

தரிசு, மானாவாரிக்கு ஏற்றது!

வேம்பு வெறும் நிழலுக்காக, மருத்துவத்துக்காக மட்டுமே வளர்க்கப்படும் மரமல்ல.... வணிகரீதியாகவும் வளர்த்து லாபம் பார்க்கலாம். அனைத்து வகை மண்ணிலும் வளர்ந்தாலும், கரிசல் மண்ணில் நன்றாக வளரும். நீர் தேங்கும் இடங்களில் வளர்ச்சிக் குறைவாக இருக்கும். இறவை, மானாவாரி இரண்டு முறைகளிலும் இதைப் பயிர் செய்யலாம். இறவையில் ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் மழைக் காலங்களில் நடவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி 15 அடி, வரிசைக்கு வரிசை 30 அடி இடைவெளியில் மூன்று கன அடி அளவில் குழியெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 96 குழிகள் வரை எடுக்கலாம். ஒவ்வொரு குழியிலும் 1 கிலோ மண்புழு உரம், 30 கிராம் வேர் வளர்ச்சி உட்பூசணம் (வேம்), 1 கிலோ தொழுவுரம், 15 கிராம் அசோஸ்பைரில்லம், 15 கிராம் பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து இட்டு, அதன்பிறகு கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

தண்ணீர் வசதியுள்ள இடங்களில், நடவு செய்த முதல் ஆண்டு வரை 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதும். அதன்பிறகு அவ்வப்போது மரத்தைக் காய விடாமல் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் ஒவ்வொருக் கன்றைச் சுற்றியும் 10 அடி சுற்றளவுக்கு ஒரு அடி உயரத்தில் வட்ட வடிவில் கரை அமைக்க வேண்டும். இதன் மூலம் மழைநீரைச் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். நன்றாக நிழல் கட்டும் வரை ஊடுபயிராக கம்பு, சோளம், கடலை, தட்டை போன்ற பயிர்களை சாகுபடி செய்து கொள்ளலாம்.

மரம் 4 ஆயிரம்!

வேப்ப மரம் நடவு செய்த 5 அல்லது 6 ஆண்டுகளில் காய்க்க ஆரம்பிக்கும். ஏப்ரல், மே மாதங்களில் பூக்கும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பழங்கள் இருக்கும். நிலத்தின் தன்மைக்கேற்ப 8 வயதுள்ள மரத்தில் சுமார் 5 முதல் 10 கிலோ விதையும், 10 வயதுள்ள மரத்தில் சுமார் 10 முதல் 15 கிலோ விதையும் கிடைக்கும். பழங்கள் கீழே விழுந்த பிறகு சேகரிப்பதை விட, மரத்தில் பழமாக இருக்கும் போதே சேகரித்தால்... அதிக மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ விதை குறைந்தபட்சம் பத்து  ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்தக் கணக்கின்படி ஒரு ஏக்கரிலுள்ள 96 மரங்கள் மூலமாக ஏக்கருக்கு சுமாராக 10 ஆயிரம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். 10 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும் ஒரு வேப்ப மரம், 4 ஆயிரம் ரூபாய் வரை விலைபோக வாய்ப்பிருக்கிறது. ஒரு ஏக்கரிலுள்ள 96 மரங்கள் மூலமாக 3,84,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இது தற்போதைய விலைதான். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். அதேபோல் வீடு மற்றும் வரப்புகளில் வளர்க்கும் மரங்களை பல ஆண்டுகள் வளர்க்கும்போது அதற்கு நள்ளவிலை கிடைக்கின்றது.   

No comments: